1980ம் ஆண்டு ‘ஒருதலை ராகம்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகத்தில் நுழைந்தவர் டி.ராஜேந்தர். அந்தப் படத்தில் இசையமைப்பாளர், பாடலாசிரியர், கதை, வசனகர்த்தாவா அறிமுகமானார்.
அதே ஆண்டில் வெளிவந்த ‘வசந்த அழைப்புகள்’ படம் மூலம் இயக்குனர் ஆனார். தொடர்ந்து ‘ரயில் பயணங்களில், தங்கைக்கோர் கீதம், உயிருள்ளவரை உஷா, மைதிலி என்னை காதலி, ஒரு தாயின் சபதம், என் தங்கை கல்யாணி, எங்க வீட்டு வேலன், சிம்பு நாயகனாக அறிமுகமான ‘காதல் அழிவதில்லை’ என பல படங்களை இயக்கி உள்ளார்.
கடைசியாக 2007ம் ஆண்டில் வெளிவந்த ‘வீராசாமி’ படத்திற்குப் பிறகு அவர் கடந்த 11 ஆண்டுகளாக எந்தப் படத்தையும் இயக்கவில்லை.
இன்று அடுத்து அவர் இயக்க உள்ள ‘இன்றையக் காதல்டா’ படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு மேற்பார்வை, இயக்கம் ஆகியவை டி. ராஜேந்தர்.
இந்தப் படத்தில் ‘லேடி டான்’ ஆக நமீதா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். படத்தில் நாயகன், நாயகி ஆக புதுமுகங்கள்தான் நடிக்க உள்ளார்கள். மேலும், நகைச்சுவை நடிகர்கள் சிலரையும் அறிமுகப்படுத்த இருக்கிறார்.
இந்தப் படத்தில் ராதாரவி, இளவசரன், விடிவி கணேஷ், வெண்ணிற ஆடை மூர்த்தி, தியாகு, பாண்டு, ரோபோ சங்கர், மதன்பாப், ஜெகன் உள்ளிட்டவர்களும் நடிக்கிறார்கள்.
‘இன்றைய காதல்டா’ படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் உஷா ராஜேந்தர், பரூக் பிச்சர்ஸ் சார்பில் பரூக் தயாரிக்க உள்ளார்கள்.
இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராக உள்ளது.