மனுஸ்ரீ பிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் மனுக் கண்ணன் இயக்கியுள்ள படம் ‘அங்குசம்’.
RTI எனப்படும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றிய பின்னணியில் உருவான கதை இது.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது.
நிகழ்ச்சியில் இயக்குநர் மனுக்கண்ணன் பேசும் போது- ” இன்று இந்த நிகழ்ச்சிக்கு நான் தாமதமாக வந்ததற்குக் கூட நான் இந்தப்படம் தொடர்பான வழக்கிற்காக நீதிமன்றம் சென்று வந்ததே காரணம்.
இந்தப்படம் RTI எனப்படும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RIGHT TO INFORMATION ACT) பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் சரியான படம். இதற்காக பல தடைகளை எதிர் கொண்டு வருகிறேன். அதை எல்லாம் அவஸ்தையாகக் கருதவில்லை.
இது ஒரு நியாயமானபடம். இந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் தேவையான சட்டம். ஆனால் மக்கள் அது பற்றிய விழிப்பில்லாமல் இருக்கின்றனர்.
மக்களால் வாக்களித்து அமர வைக்கப் படுகிற சட்டமன்ற உறுப்பினராகட்டும் , பாராளுமன்ற உறுப்பினராகட்டும், அரசாகட்டும், அமைப்பாகட்டும், எதுவாகவும் இருக்கலாம். இந்த அமைப்பில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உள்ளது.
நம்நாட்டில் ரேஷன் கார்டு, ஜாதிச் சான்றிதழ் வாங்குவதற்குக் கூட கையூட்டு தரவேண்டியுள்ளது. இன்றே இந்தச் சூழல் இருந்தால் வருங்கால சமுதாயம் என்ன செய்யும்?
1759ல் ஆங்கிலேயன் இங்கு வந்த போது அவனுக்குச் சொந்த நிலம் என்று எதுவுமே இல்லை. ஆனால் நாட்டைப் பிடித்து சுமார் 300 ஆண்டுகள் ஆண்டான். நாமும் அடிமைகளாய்க் கிடந்தோம். ஆனால் நம் ஆங்கில மோகம் இன்று அதிகமாகி விட்டது. தமிழில் பேசினால் புரியாது. தமிழில் பேசினால் சிரிக்கிறார்கள்.என்ன கொடுமை சார் இது என்று தான் சொல்ல வேண்டும்.
நான் லண்டனில் பேசிய போது இந்தப்படம் பற்றி விசாரித்தார்கள். எம்.டெக். எம்.பி.ஏ., படித்த உங்களுக்கு இதெல்லாம் தேவையா என்கிறார்கள்.
என்னைக் கேட்டால் நிச்சயம் தேவைதான். இதையும் செய்யவில்லை என்றால் அது மக்களுக்குச் செய்யும் துரோகம். சமூகப் போராளிகள் எல்லாம் இந்தச் சட்டத்தை இரண்டாவது சுதந்திரம் என்கிறார்கள். இந்தச் சட்டத்தில் உள்ள பிரச்சினையை சரிசெய்ய வருகிற ‘ரைட் டு சர்வீஸ் ஆக்ட்’ பற்றியும் படமெடுப்பேன். பயந்து பின்வாங்கி ஓடமாட்டேன்.
படம் பார்த்தவர்கள் சொன்னது என்ன தெரியுமா? ஒரு முதல்வரை பிரதமர் அளவுக்கு உயர்த்திக் காட்டியிருக்கிறீர்கள். உங்களுக்கு ஒரு சங்கடமா என்று கேட்கிறார்கள்.
நான் முதல்வர் பற்றி படத்தில் உயர்வாகத்தான் காட்டியுள்ளேன். தவறாக எதையும் சொல்ல வில்லை. இதை 20 முறை படம் பார்த்த பலரும், தமிழக அரசின் படங்களுக்கான தேர்வுக்கு ழுவிலுள்ள சங்கர் கணேஷ் உள்பட அனைவரும் ஒப்புக் கொண்டு இருக்கிறார்கள்.
மக்களிடம் எந்த நல்ல விஷயத்தையும் கொண்டு சேர்ப்பவை ஊடகங்கள்தான். இந்தப்படம் மக்கள்படம். இதைக் கொண்டு சேர்க்கும் பொறுப்பு ஊடகங்களிடம்தான் உள்ளது
என் மனைவி நான் சினிமா டைரக்டர் ஆனதற்குத் திட்டுகிறார். இன்ஜினியராக இருந்தீர்கள் பெருமையாக இருந்தது. மேனேஜராக இருந்தீர்கள் பெருமையாக இருந்தது. டைரக்டர் என்பது கேவலமாக இருக்கிறது என்று திட்டுகிறார்.
இந்தப் படம் வெற்றியோ தோல்வியோ, நான் கவலைப்பட மாட்டேன். மீண்டும் வெளிநாடு செல்வேன். சம்பாதித்து மறுபடியும் வந்து மக்கள் படம் எடுப்பேன், “இவ்வாறு இயக்குநர் மனுக் கண்ணன் பேசினார்.
