‘கோச்சடையான்’ படத்தின் வெளியீட்டுத் தேதி சம்பந்தமாக பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்திய அளவில் மிகவும் புகழ் பெற்ற இரண்டு நட்சத்திரங்களான ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடித்துள்ள இந்த படம் ‘சலனப் பதிவு தொழில்நுட்பம்’ மூலம் படமாக்கப்பட்டிருந்தாலும் இந்திய மொழிகளில், தெரிந்த நட்சத்திரங்கள் நடிப்பதால் பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது.
சில வாரங்களுக்கு முன் இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவித்தார்கள். ஆனால், படத்தின் இசை வெளியீடு நடத்தப்பட்ட பின்னும் இதுநாள் வரை இந்த தேதியில் படம் வெளிவர இருக்கிறது என்ற எந்த முறையான அறிவிப்பும் வெளியாகவில்லை.
சில தினங்களுக்கு முன் மும்பையில் நடைபெற்ற ‘கோச்சடையான்’ ஹிந்தி பதிப்பின் டிரைலர் வெளியீட்டு விழாவில், படத்தின் ரிலீஸ் தேதி பற்றி முறையான வெளியாகும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், அன்றும் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
அநேகமாக, மே மாத இறுதியில்தான் படம் வெளிவர வாய்ப்புள்ளதாக சிலர் கூறுகிறார்கள். ஆனால், தயாரிப்பு நிறுவனமே அறிவிப்பை வெளியிடாமல் யூகத்தின் அடிப்படையிலேயே மற்றவர்கள் இதைக் கூறுகிறார்கள்.
‘கோச்சடையான்’ வெளியீடு எப்போது என்று தமிழ்த் திரையுலகினர் பலருக்கும் தெரியாத நிலையே உள்ளது. இதனால், பல படங்களை எடுத்து முடித்து விட்டு வெளியீட்டுக்குத் தயாராக உள்ள தயாரிப்பாளர்கள் மிகவும் வருத்தத்தில் உள்ளார்கள்.
‘கோச்சடையான்’ படத்தின் வெளியீட்டுத் தேதியை வைத்தே அவரவர் படங்களின் வெளியீட்டுத் தேதியை முடிவு செய்ய அவர்கள் காத்திருக்கிறார்கள்.
இப்படி ஒரு படத்தின் வெளியீட்டுக்காக பல படங்கள் காத்திருக்க வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. தமிழ் ரசிகர்கள் தங்களை வாழ வைப்பர்கள் என சொல்லும் ரஜினிகாந்த், மற்ற தமிழ் தயாரிப்பாளர்களையும் வாழ வைப்பாரா என்பதே அவர்களது கேள்வியாக உள்ளது.
சரி, இதெல்லாம் ரஜினிகாந்தின் காதுக்கு எட்டுமா ?