சூர்யா ஜோடியாக ‘அஞ்சான்,’, விஜய் ஜோடியாக ‘கத்தி’ ஆகிய படங்களில் நடித்து வரும் நடிகை சமந்தா, நரேந்திர மோடியை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார்.
தெலுங்கு செய்தித் தொலைக்காட்சியான டிவி 9, சமந்தாவின் பேட்டி ஒன்றை வெளியிட்டு ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சமந்தா இதற்கு முன் தமிழில் சில படங்களில் நடித்திருந்தாலும் இன்னும் பெரிதாக புகழ் பெறவில்லை. ஆனால், தெலுங்கில் முன்னணி நடிகையாகவும், நம்பர் 1 நடிகையாகவும் இருக்கிறார்.
இதனால், அவரது அரசியல் ஆதரவு பற்றி அங்கே பரபரப்பாக பேசி வருகிறார்களாம்.
அந்த பேட்டியில் சமந்தா கூறியிருப்பதாவது,
“நான் ஒரு மோடி ஆதரவாளர். மோடியின் தலைமையில் நாட்டில் மாற்றங்கள் ஏற்படும் என்று நான் நம்புகிறேன். பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தி நாட்டை இன்னும் முன்னணி நிலைமைக்கு அவர் கொண்டு வருவார்,” எனக் கூறியுள்ளார்.
ஆந்திராவில், நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திரைப்பட நட்சத்திரங்கள் பலரும் அவர்களது ஆதரவு நிலையை வெளிப்படுத்தி வருகிறார்கள். பல்வேறு கட்சிகளிலும் அவர்களை இணைத்துக் கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் சமந்தாவின் இந்த அரசியல் சார்ந்த பேட்டி அங்கு பலத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என அரசியல் நோக்கர்களும், திரையுலகினர்களும் மேலும் ஆச்சரியப்படுகிறார்கள்.