இயக்குனர் பாலா ஒரு படத்தை இயக்குகிறார் என்றாலே அதைப் பற்றிய பரபரப்பான செய்திகள் வெளிவருவது வழக்கம்.
தமிழ் சினிமாவின் சிறந்த படைப்பாளிகளில் ஒருவராக அறியப்படும் பாலாவின் அடுத்த படம் ‘தாரை தப்பட்டை’.
இளையராஜாவின் இசையமைப்பில் சசிகுமார், வரலட்சுமி மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படம் பற்றி அடிக்கடி ஏதாவது ஒரு செய்தி வந்து கொண்டிருப்பது வாடிக்கையாகிவிட்டது.
கடந்த சில நாட்களாக இணையதளங்களில் ‘தாரை தப்பட்டை’ படத்தின் கதை இதுதான் என செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பாலா அவர் இயக்கும் படத்தின் கதையை அந்த படத்தில் நடிக்கும் நடிகர்களுக்குக் கூட சொல்ல மாட்டார் என்பது கோடம்பாக்கத்தில் உள்ள அனைவருக்கும் தெரிந்த செய்தி.
இன்னும் ஏன், எந்த மாதிரியான காட்சிகளை படம் பிடிக்கப் போகிறோம் என்பதைக் கூட படப்பிடிப்பு நடக்கும் காலைதான் மற்றவர்களுக்கே சொல்வாராம்.
அப்படியிருக்க ‘தாரை தப்பட்டை’ படத்தின் கதை இது என எப்படி இணையதளங்களில் வருகிறது என்பது தெரியவில்லை. இருந்தாலும், நாமும் அதே கதையை உங்களுக்காகத் தருகிறோம், இது படத்தின் உண்மையான கதைதான் என்ற உத்தரவாதம் இல்லாமல்,
“பிராமண குடும்பத்தில் பிறந்தவர் சசிகுமார். அவரது குடும்பத்தாருக்கு சசிகுமாரை மிகப் பெரிய மிருதங்க வித்வானாக உருவாக்க வேண்டும் என்ற ஆவல். ஆனால், சசிகுமாரோ தவில் வாத்தியத்தால் ஈர்க்கப்பட்டு, தவில் கலைஞராக உருவாக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அதை கற்கவும் செய்கிறார்.
பின்னர், ஒரு கரகாட்டக் குழுவில் சேர்ந்து ஊர் ஊராகச் சென்று தவில் வாசிக்கிறார். அந்த குழுவில் கரகாட்டக் கலைஞராக இருக்கும் வரலட்சுமிக்கும் காதல் வருகிறது. தங்களை விட அந்தஸ்திலும், சாதியிலும் குறைவாக இருக்கும் பெண்ணை காதலிப்பதாக என சசிகுமார் காதலுக்கு அவரது குடும்பத்தினர் எதிராக இருக்கிறார்கள்.
அதோடு, பரதக் கலையில் சிறந்த ஒரு பெண்ணை அவருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கிறார்கள். அதை ஏற்க மறுக்கும் சசிகுமார், பரதத்தை விட கரகம்தான் நம் மண்ணின் சிறந்த கலை என்றும், மிருதங்கத்தை விட தவில்தான் சிறந்த இசைக் கருவி என்றும் எப்படி நிரூபிக்கிறார் என்பதும்தான் படத்தின் கதையாம்.
அட…என்ன அழகா ஒரு கதையை கண்டு பிடிச்சி சொல்லியிருக்காங்க. இந்த கதை உண்மையாக இருந்தால் இதைக் கண்டு பிடித்து எழுதியிவருக்கு ‘தாரை தப்பட்டை’ கிளம்ப மாலை, மரியாதை கொடுக்கலாம். இல்லை…‘தாறு மாறு தகராறு’ ஆகிடும்…