வித்யா பாலன் நடித்து ஹிந்தியில் பெரும் வெற்றி பெற்ற ‘கஹானி’ திரைப்படம் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தயாராகி, நயன்தாரா நடிக்க தெலுங்கில் ‘அனாமிகா’ என்ற பெயரிலும், தமிழில் ‘நீ எங்கே என் அன்பே’ என்ற பெயரிலும் மே 1ம் தேதி வெளியாகிறது.
மற்ற மொழிகளில் வெளிவந்த ஹிட்டான படங்களை இயக்கும் போது, அந்த படத்தைப் பற்றியும், இங்கு எடுக்கப்படும் படத்தைப் பற்றியும் எப்போதுமே ஒரு ஒப்பீடு இருக்கும்.
அதோடு, அந்த கலாச்சாரம், வாழ்க்கை முறை ஆகியவற்றை நமது ரசிகர்களுக்கு ஏற்பட மாற்றுவதே சவாலான விஷயமாக இருக்கும்.
‘நீ எங்கே என் அன்பே’ படத்தை இயக்கியுள்ள சேகர் கம்முலா தெலுங்கில் சிறந்த இயக்குர் என்ற பெயரைப் பெற்றவர். இவர் இதற்கு முன் இயக்கிய ‘லீடர், ஹேப்பி டேய்ஸ், கோதாவரி, ஆனந்த், லைப் இஸ் பியூட்டிபுல்’ படங்கள் அவரது திறமையை வெளிப்படுத்திய படங்கள்.
சமீபத்திய பத்திரிகை பேட்டி ஒன்றில் இனி, ரீமேக் படங்களை இயக்கவே மாட்டேன் என சேகர் கம்முலா கூறியுள்ளார்.
“நீ எங்கே என் அன்பே’ படத்தை இயக்க நான் முடிவு செய்யவேயில்லை. படத்தின் தயாரிப்பாளர்கள் அவர்களாகவே என்னை அணுகினார்கள்.
ஆரம்பத்தில் எனக்கு அதிக ஆர்வம் இருந்தது. ஏனென்றால் நான் ‘கஹானி’ படத்தை அதற்கு முன் பார்க்கவில்லை.
டெல்லி கற்பழிப்புச் சம்பவம் என்னை மிகவும் பாதித்தது. திரைப்படங்கள் மூலம், இந்த சமுதாயத்திற்கு ஏதாவது சொல்ல வேண்டும் என்ற விருப்பம் இருந்தது.
‘நீ எங்கே என் அன்பே’ திரைப்படம் பெண்களின் பல பிரச்சனைகளைப் பற்றி சொல்லும் ஒரு படமாக அந்த சமயத்தில் எனக்கு பொருத்தமாக தெரிந்தது.
என் படங்களுக்கு எப்போதுமே நானே கதை எழுதுவேன். ஆனால், முதன் முறையாக இன்னொரு எழுத்தாளரின் உதவி இந்த படத்திற்காக எனக்கு தேவைப்பட்டது.
படம் எடுக்க ஆரம்பித்த பின்தான் ஒரு ரீமேக் படத்தை இயக்குவது எவ்வளவு சிரமமான விஷயம் என்பதை உணர்ந்தேன். ஏனென்றால், அப்படி எடுப்பது நாம் சொந்தமாக கதை சொல்லும் முறையிலிருந்து மிகவும் மாறுபடுகிறது.
அதனால்தான் இனி, ரீமேக் படங்களையே இயக்குவதில்லை என முடிவு செய்தேன்,” என தெரிவித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகின் பிரம்மாண்டமான இயக்குனரான ஷங்கர், இதற்கு முன் இயக்கிய ‘3 இடியட்ஸ்’ படத்தின் ரீமேக்கான ‘நண்பன்’ அவருக்கு பெரிய பெயரைப் பெற்றுத் தரவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ரீமேக் படங்கள் சிலருக்கு மட்டுமே ‘ராஜா’வாக அமைகின்றன.