இசையமைப்பாளர் இளையராஜா, தனது 71வது பிறந்த நாளை மிகவும் எளிமையாக நேற்று, சென்னையிலுள்ள, பிரசாத் ஸ்டுடியோவில் கொண்டாடினார்.
அவரை ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய பஞ்சு அருணாச்சலம், இயக்குனர் பாலா, பார்த்திபன், எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் மற்றும் பலர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டனர்.
அப்பேது பேசிய பஞ்சு அருணாச்சலம், இளையராஜாவை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியதுதான் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பெருமை என்றார்.
“நான் ஏராளமான சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளேன் என்பதோ, நான் ஒரு நல்ல தயாரிப்பாளர் என்பதோ, நான் ஒரு நல்ல வசனகர்த்தா என்பதோ, அல்லது நீண்ட காலம் சினிமாவில் இருப்பதையோ எனது பெருமையாக சொல்லமாட்டேன். நான்தான் இளையராஜாவை அறிமுகப்படுத்தினேன் என்பதே எனக்குக் கிடைத்த பெருமை.
ஒரு தாய் தன் மகனைக் கொஞ்சும்போது, அவனை கண்ணே !, மணியே! என்றுதான் கொஞ்சுவாள். அவனை வருங்கால முதல்வரே, என்றெல்லாம் புகழமாட்டாள். ஆனால் அந்தக் குழந்தை வளர்ந்த பிறகு சாதனைகள் செய்யும். அதுபோலத்தான் ‘அன்னக்கிளி’ படத்தில் நான் இளையராஜாவை குழந்தையாகத்தான் பார்த்தேன். அவர் அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு புகழ் பெற்று வளர்ந்துவிட்டார்.
எந்த ஒரு துறையிலும் ஒரு கட்டத்திற்கும் மேல் சலிப்பு வந்துவிடும். ஆனால் ஒரு சிலர் மட்டும்தான் ஆரம்பத்தில் இருந்தது போல இன்னும் சுறுசுறுப்பாக வேலை பார்ப்பார்கள். அந்த பாக்கியத்தை இளையராஜாவுக்குக் கொடுத்த கடவுளுக்கு என் நன்றிகள்,’’ என்றார்.