மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நாயகனாக நடித்த ‘முகமூடி’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே.
2010ம் ஆண்டிற்கான மிஸ் யூனிவர்ஸ் இந்தியா போட்டியில் இரண்டாவது ‘ரன்னர்-அப்’பாகத் தேர்வானவர். தொடர்ந்து விளம்பர மாடலாகவும் இருந்த பூஜா, பல விளம்பரப் படங்களில் நடித்துள்ளார். இந்திப் பட நாயகன் ரன்பீர் கபூருடன் ஒரு விளம்பரப் படத்தில் நடித்த பின் மிகவும் புகழ் பெற்றார்.
2012ம் ஆண்டு வெளிவந்த ‘முகமூடி’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அந்தப் படம் படுதோல்வி அடைந்ததை அடுத்து பூஜாவுக்கு தமிழில் வேறு எந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. இவர் நடித்த இரண்டு தெலுங்கப் படங்கள் இந்த ஆண்டு வெளிவந்தன.
தற்போது மிகப் பெரிய வாய்ப்பு ஒன்று பூஜா வீட்டுக் கதவைத் தட்டியுள்ளது. பிரபல இயக்குனரான அஷுதோஷ் கௌரிகர் ஹிரித்திக் ரோஷனை நாயகனாக வைத்து இயக்க இருக்கும் ‘மொகஞ்சதாரரோ’ படத்தின் நாயகியாக பூஜா ஹெக்டே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
“பூஜாவைக் கண்டுபிடித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஹிரித்திக்குடன் ஜோடி சேர்த்துப் பார்க்கும் போது அழகாக இருக்கிறார். அவர் ஒரு இயல்பான நடிகை, புத்துணர்ச்சியுடன், நேர்த்தியான அழகுடன் இருக்கிறார்,” என பாராட்டுகிறார் இயக்குனர் அஷுதோஷ்.
‘முகமூடி’ பார்க்கும் போது எங்க கண்ணுக்கும் அப்படித்தான் தெரிஞ்சாங்க. ஆனால், அதை அப்ப சொன்னப்பா நம்மளை திட்டினாங்க…
‘மொகஞ்சதாரோ’ படப்பிடிப்பு அக்டோபர் மாதம் முதல் ஆரம்பமாக உள்ளது.