‘பாண்டிய நாடு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு சுசீந்திரன் இயக்கத்தில் தயாராகி வரும் படம் ‘ஜீவா’. இமான் இசையமைக்கும் இப்படத்தில் விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகி வரும் படம் இது. விஷ்ணுவின் எட்டு வயதில் ஆரம்பமாகி, அவருடைய 15 வருஷ கிரிக்கெட் பயணத்தை சொல்லும் படம் இது. கிரிக்கெட்டரான விஷ்ணுவே இப்படத்தில் நாயகனாக நடிப்பதால் எந்த வித பதட்டமும் இல்லாமல் இயல்பாகவே படமாக்கி வருகிறார்களாம். ‘வெண்ணிலா கபடிக் குழு’ படத்தில்தான் விஷ்ணுவை நாயகனாக அறிமுகப்படுத்தினார் சுசீந்திரன்.
எல்லா நாட்டுலயும் விளையாட்டு வீரர்கள் விளையாடித்தான் தோத்துப் போவாங்க. ஆனால், நம்ம நாட்டுலதான் ஒரு வீரன் வாய்ப்புக் கிடைக்காமலேயே தோத்துப் போவான். இந்திய நாட்டுல கிரிக்கெட்டுக்கு இருக்கிற பிரபலத்தை வச்சித்தான் கிரிக்கெட்டை கதைக் களமா வச்சிருக்கேன். எல்லா திறமைகள் இருந்தும் ஒருத்தன் எப்படி எல்லாம் பேராட வேண்டி இருக்குன்னு சொல்லியிருக்கேன். பத்து வருஷம் கழிச்சி திரும்பிப் பார்த்தால் கூட எனக்கான பெருமையான படமா இந்த ’ஜீவா’ நிச்சயமா இருப்பான் என்கிறார் இயக்குனர் சுசீந்திரன்.
‘பாண்டிய நாடு’ படத்தில் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களுமே ஹிட்டாக அமைந்தது. அதைத் தொடர்ந்து மீண்டும் சுசீந்திரனுடன் இமான் இந்தப் படத்தில் இணைந்திருக்கிறார்.
இப்படத்தின் பாடல்கள் நாளை விஜய் டிவியில் மூன்று மணிக்கு ஒளிபரப்பாக உள்ள ‘இசையுடன் இமான்’ நிகழ்ச்சியில் முதல் முறையாக வெளியிட இருக்கிறார்கள்.