எஸ்.பி. ஜனநாதனின் பைனரி பிக்சர்ஸ் மற்றும் யு டிவி மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘புறம்போக்கு’.
ஆர்யா, விஜய் சேதுபதி, ஷா, கார்த்திகா மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது. இப்படத்தைப் பற்றி இயக்குனர் ஜனநாதன் கூறியதாவது,
“சிறையில் உள்ள எல்லோருமே குற்றவாளிகள் அல்ல. நமது சரித்திரத்தின் பெரும் அத்தியாயங்கள் சிறைச்சாலையில்தான் அரங்கேறி உள்ளது. மகாத்மா காந்தி , நெல்சன் மண்டேலா போன்ற மாபெரும் தலைவர்கள் சிறைச்சாலையில் இருந்துதான் தங்களது வெற்றிச் சரித்தரத்தை துவங்கினர்.
சிறைச்சாலை இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரமாக அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களின் பெயர்களும் நமது சரித்தரத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.
சுதந்திர போராட்ட காலத்தில் மதுரையில் பிறந்து பின்னர் ஆந்திராவில் வாழ்ந்த வரலாற்று நாயகன் பாலுவின் பெயர்தான் ஆர்யாவுக்கு சூடப்பட்டு உள்ளது. சுதந்திர போராட்டத்தில் முக்கியப் பங்காற்றிய தமிழகத்தின் புரட்சி வீராங்கனை வேலு நாச்சியார் அவர்களின் பாசறையில் முக்கிய பங்கு வகித்து , பின்னர் ஆங்கிலேயர்களின் ஆயுதக் கிடங்கை மனித வெடிகுண்டாக மாறி அழித்த குயிலின் பெயர் கார்த்திகாவுக்கு சூட்டப்பட்டுள்ளது.
ஆங்கிலேயர் காலத்தில் அவர்களது கல்வி முறையை அறிமுகப்படுத்தியவரும், ஆங்கிலேயர்களின் கடுமையான தண்டனை முறையை அறிமுகப்படுத்தியவருமான மெக்கலே-வின் பெயர் ஷாமுக்கும், மிகவும் வித்தியாசமான யாரும் எதிர்பாராத ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்துக்கு யமலிங்கம் என்றும் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
கலை இயக்குனர் செல்வகுமாரின் கை வண்ணத்தில் உருவான அந்த பிரம்மாண்டமான சிறைச்சாலை அரங்கின் , ஒவ்வொரு சதுரத்தையும் தனது நேர்த்தியான ஒளிப்பதிவு மூலம் படமாக்கி உள்ளார் ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம். தொழில் நுட்பப் தேவைகளுக்கு சிறிதும் தயங்காமல் , படத்தின் தரமே முக்கியம் என உறுதுணையாக இருக்கும் யு டிவி நிறுவனத்துக்கும் நன்றி,” என்கிறார் இயக்குனர் ஜனநாதன்.