‘கத்தி’ படத்திற்கு தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததையொட்டி அந்தப் படம் திட்டமிட்டபடி நாளை வெளியாகுமா என்ற சந்தேகம் காலை வரை இருந்தது.
நேற்று இரவு சென்னையில் சில திரையரங்குகளில் பெட்ரோல் குண்டு வீசியும் தாக்குதல் நடத்தப்பட்டது. அதன் பின்னும் பிரச்சனையில் அடுத்து என்ன நடக்கும் என்ற ஒரு குழப்பம் அனைவரிடத்திலும் இருந்து வந்தது.
சற்று முன்னர் தமிழர் அமைப்புகள் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அப்போது லைகா நிறுவனம் பட விளம்பரங்களில் ‘லைகா’ என்ற பெயரை நீக்குவதற்கு சம்மதம் தெரிவித்ததைப் பற்றியும், அது தொடர்பாக அவர்கள் தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு தலைவர் வேல் முருகனுக்கு அளித்த கடிததத்தையும் வெளியிட்டனர்.
லைகா நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர்களில் ஒருவரான கருணாகரன் கையொப்பமிட்டுள்ள அந்தக் கடிதத்தில் “தங்களின் உணர்வுகளை மதித்தும் நியாயமான கோரிக்கைகளை ஏற்றும் எங்கள் படத்திலிருந்து லைகா புரொக்ஷன்ஸ் என்ற பெயரினை நீக்கியுள்ளோம் என்பதனையும், மற்றும் படம் சார்ந்த இதர விளம்பரங்களிலும் பெயர் இடம் பெறாது என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறோம். மீண்டும் தங்களோடு அமர்ந்து எங்கள் தரப்பு விளக்கங்களை உங்களோடு தெளிவாக பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளோம், ” எனக் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து ‘கத்தி’ படத்திற்கான எதிர்ப்பும் விலக்கிக் கொள்ளப்பட்டு படம் நாளைக்கு படம் வெளிவருவதை தமிழ் அமைப்புகள் அனுமதி அளித்துள்ளன.
இத்துடன் ‘கத்தி’ பிரச்சனை முழுமையாக முடிவுக்கு வருகிறது…இதைத் தொடர்ந்து ‘கத்தி’ படத்தின் முன்பதிவுகள் இணையதளங்கள் மூலமாகவும், திரையரங்குகளில் நேரடியாகவும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன…