விவிஆர் சினிமாஸ்க் நிறுவனம் சார்பில் வி.வெங்கட்ராஜ் தயாரிக்கும் படம் ‘இவனுக்கு தண்ணில கண்டம்’.
சின்னத் திரையில் பல தொடர்களை இயக்கிய எஸ்.என்.சக்திவேல் இப்படத்தை இயக்கி வருகிறார்.
விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியவரும், சன்டிவியில் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் ‘தென்றல்’ தொடரின் நாயகனுமான தீபக் இந்தப் படத்தில் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நேகா நடிக்கிறார்.
முற்றிலும் நகைச்சுவைக்கு முக்கியத்தும் கொடுக்கப்பட்டு இப்படம் உருவாகி வருகிறது. படத்தைப் பற்றி இயக்குனர் சக்திவேல் கூறியதாவது,
“ஒரு கிராமத்தில் உள்ள கேபிள் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருக்கிறார் தீபக். அவருக்கிருக்கும் திறமைக்கு அவர் சென்னை சென்றால் பெரிய ஆளாகி விடலாம் என ஊரே அவரை ஊக்குவிக்க, சென்னைக்கு வந்து ஒரு பெரிய டிவி சேனலில் வேலைக்குச் சேர்கிறார்.
சீக்கிரத்திலேயே பிரபலமாகி விடும் அவரை ஏகப்பட்ட பிரச்சனைகள் சுற்றி நின்று வளைக்கிறது. அவற்றை தீபக் எப்படி முடிவுக்குக் கொண்டு வருகிறார் என்பதுதான் படத்தின் கதை.
டிவியிலிருந்து சினிமாவுக்கு வந்து ஜெயித்த சிவகார்த்திகேயனைப் போல, இந்தப் படம் மூலம் தீபக், அடுத்த சிவகார்த்திகேயன் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை,” என்கிறார் சக்திவேல்.
“இப் படத்தின் மூலம் தனக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதால் இனி, டிவி தொடர்களிலும் நான் நடிக்கப் போவதில்லை. ‘தென்றல்’ தொடர்தான் நான் கடைசியாக நடிக்கும் தொடர்,” என நம்பிக்கையுடன் பேசுகிறார் தீபக்.