கடனை நாங்களே திருப்பிச் செலுத்தி விடுவோம் – ‘கோச்சடையான்’ தயாரிப்பாளர்…

media one global entertainment press meet‘கோச்சடையான்’ திரைப்பட வங்கிக் கடன் பிரச்சினை சம்பந்தமாக லதா ரஜினிகாந்தைத் தொடர்புப்படுத்தி ஊடகங்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் மீடியா ஒன் குளோபல் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் அந்நிறுவன இயக்குநர் டாக்டர் முரளி மனோகர் ஊடகங்களை இன்று காலை சந்தித்து சில விளக்கங்களை அளித்தார்.

“நான் இங்கே சில உண்மைகளை பகிர்ந்து கொள்ளவே உங்களைச் சந்திக்க வந்துள்ளேன். உங்கள் முன் யதார்த்தத்தை சொல்லவே வந்துள்ளேன். குளோபல் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் ஒரு பொது நிறுவனம். இது கடந்த பத்தாண்டுகளாக செயல்பட்டு வருகிறது. படத்தயாரிப்பு, பட விநியோகம், திரையீடு என பலவிதமான தளங்களிலும் இயங்கி வருகிறது. படத் தயாரிப்பை எடுத்துக் கொண்டால் ஐஸ்வர்யாராய், மிராண்டா ரிச்சர்ட்சன் நடித்து ஏ.ஆர். ரகுமான் இசையமைத்த ‘Provoked’ போன்ற சர்வதேச தரத்திலான படங்களையும் சர்வதேச சந்தைக்குக் கொண்டு சென்றிருக்கிறது.

தமிழில் ‘தாம் தூம்’ படத்தை இந்த நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளோம். நான் ‘ஜீன்ஸ், மின்னலே’ ஆகிய படங்களையும் தயாரித்துள்ளேன். ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படத் துறையில் இருந்து வருகிறேன்.

நம் நாட்டு பிரபலங்களை உலக அளவில் கொண்டு செல்லும் முயற்சியாக 1988 லேயே ரஜினிகாந்த் நடித்த ‘ப்ளட் ஸ்டோன்’ என்ற ஆங்கிலப் படத்தை எடுத்தேன். அதே போல ‘கோச்சடையான்’ படத்தை சர்வதேச தரத்துடன் எடுக்க நினைத்தோம். இங்கு ஒரு படத்தின் வியாபாரத்தில் லாப நஷ்டம் உடனே தெரியவரும். ஆனால், நம் பிரபலங்களை உலக அளவில் கொண்டு சேர்ப்பதில் உள்ள சிக்கல், வியாபார லாபம் சற்று தாமதம் ஆகும். ‘கோச்சடையான்’ படத்தைப் பொறுத்தவரை அதை பல வெளிநாட்டு மொழிகளில் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. ஆங்கில மொழி சம்பந்தமான வேலைகள் இப்போது நடந்து வருகிறது. மே மாதம் படத்தின் ஆங்கில வடிவத்தை உலகம் முழுவதும் திரையிட உள்ளோம்.

தமிழ் நாட்டைப் பொறுத்தவரை எங்களுக்கு சொந்தமானவை, குத்தகை என்று 30 திரையரங்குகள் உள்ளன. இந்த வரிசையில் மேலும் சில திரையரங்குகளைக் கொண்டுவர ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளன. இவை எல்லாவற்றையும் சமமாக்கி ஒரு சுதந்திரமான சங்கிலியாக்க முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன.

அது ஒரு தொழில் நுட்பரீதியிலான நல்ல முயற்சி. ஆனால் அப்போது நிதிப்பிரச்சினை ஏற்பட்டது. மீடியா ஒன் குளோபல் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் எக்ஸிம் வங்கியில் 20 கோடி ரூபாய் சட்டத்திற்கு உட்பட்டுதான் கடன் வாங்கியது. இதை தனது சுயமான திருப்பிச் செலுத்தும் சக்தியுடன் தான் வாங்கியது. அப்போது பிரச்சினை வந்த போது திருமதி லதா ரஜினிகாந்த் எங்களுக்கு உதவ எங்களுடன் இணைந்தார். கடனுக்கு வங்கியில் உத்திரவாதம் அளித்தார்.

உண்மையில் இந்நிறுவனம் 31.3.2015 க்குள் அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த இருக்கிறது. இதை முடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் டிசம்பர் 2014ல் வங்கியுடன் சுமுகமாக முடிந்துள்ளன. வங்கிக்கான வட்டியை ஜூன் 2014 வரை முறையாக தொடர்ச்சியாக செலுத்தியே வந்து இருக்கிறது.

நிதிப்பிரச்சினை எல்லாருக்கும் வருவது சகஜம்தான். எங்களுக்கும் வந்தது. .அதிலிருந்து மறு சீரமைப்பு செய்து வேறு வேறு வரவு ஆதாரங்கள் மூலம் மீளும் திட்டமும் வகுக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் திருமதி லதா ரஜினிகாந்த் அவர்கள் உத்திரவாதம் அளித்தவர் மட்டுமே.ஆனால்அவரை சம்பந்தப்படுத்தி செய்திகள் வருகின்றன. எனவே உத்திரவாதம் அளித்த அவருக்கு தொந்தரவு தராதபடி நாங்களே கடனை அடைத்து விடுவோம். தவறான செய்திகளை நம்ப வேண்டாம்,” முரளி மனோகர் தெரிவித்தார்.

Read Previous

2014 – தமிழ் சினிமாவில் ‘வி’ நடிகர்களின் ஆட்சி…

Read Next

‘C2H’-ன் முதல் படம் ஜனவரி 15 -ல் வெளியீடு…

Most Popular