மலையாளத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படமான ‘பெங்களூர் டேய்ஸ’ படத்தின் ரீமேக் பற்றி கடந்த சில மாதங்களாகவே இவர் நடிக்கிறார், அவர் நடிக்கிறார் என்ற ரீதியில் பல செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த செய்தியும் வெளியாகவில்லை.
இந்தப் படத்தில் ஆர்யா, சித்தார்த், சமந்தா ஆகியோர் நடிப்பதாகச் சொன்னார்கள். இப்போது, சித்தார்த், சமந்தா இருவருமே இந்த ரீமேக்கில் நடிக்கவில்லை என அறிவித்து விட்டார்கள். தமிழ், தெலுங்கில் உருவாகப் போகும் இந்தப் படத்தில் நடிக்க இரு மொழிகளுக்கும் பொதுவாக நட்சத்திரங்களைத் தேர்வு செய்து நடிக்க வைக்கும் திட்டத்தை வைத்திருந்தார்கள்.
தெலுங்கில் ‘பொம்மரிலு’ படத்தை இயக்கிய பாஸ்கர்தான் இப்படத்தை இயக்கப் போகிறார். ஆனால், இதுவரை நட்சத்திரத் தேர்வு முடியாமலேதான் இருக்கிறது. மலையாளத்தில் பகத் பாசில், துல்கர் சல்மான், நிவின் பாலி, நஸ்ரியா நசிம், இஷா தல்வார், பார்வதி மேனன், நித்யா மேனன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இரு மொழிகளில் இப்படம் ரீமேக்காகும் போது இத்தனை நட்சத்திரங்ககளுக்கும் மாற்றாக பொருத்தமான நட்சத்திரங்களைத் தேடிப் பிடிப்பது அவ்வளவு சாதாரண விஷயமில்லை. மலையாளத்தில் எந்த ஈகோவும் பார்க்காமல் இளம் நட்சத்திரங்கள் நடிக்க ஒப்புக் கொள்வார்கள். ஆனால், தமிழ், தெலுங்கில் அவ்வளவு சீக்கிரம் சம்மதிக்க மாட்டார்கள்.
‘3 இடியட்ஸ்’ படத்தை தமிழில் ‘நண்பன்’ படமாக ஷங்கர் ரீமேக் செய்யும் போது முக்கிய மூன்று கதாபாத்திரங்களில் நடிகர்களை ஒப்பந்தம் செய்வதற்கே திணறிப் போனார். அவருக்கே அப்படி என்றால் ‘பெங்களூர் டேய்ஸ்’ தமிழில் ரீமேக்காகும் போது எவ்வளவு பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்குமோ…?