‘காதல் கொண்டேன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். தம்பி தனுஷ் நடிகராக தற்போது எங்கோ போய்விட்ட நிலையில், அண்ணன் செல்வராகவன் தனக்குக் கிடைத்த பெயரை தக்க வைத்துக் கொள்ளாமல் விட்டுவிட்டார்.
“மயக்கம் என்ன, இரண்டாம் உலகம்’ ஆகிய படங்கள் அவரை நிறையவே சோதித்தாலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்து வைத்துள்ளார்.
அடுத்து சிம்பு நடிக்க உள்ள படத்தை இயக்க உள்ளார் செல்வராகவன். மீண்டும் பழைய செல்வராகவனைப் பார்க்கும் ஆவலில் திரை ரசிகர்களும் உள்ளனர்.
இதனிடையே, ஒரு வார இதழுக்கு செல்வராகவன் அளித்துள்ள பேட்டியில் ‘இரண்டாம் உலகம்’ படத்தைப் பற்றி நிறையவே நொந்து போய் பேசியிருக்கிறார்.
“இரண்டாம் உலகம்’ படத்தில் நீங்கள் பார்த்தது வேறு ஒரு படம். ஏறக்குறைய 325 பேர் என் முதுகில் குத்திவிட்டார்கள். ஒண்ணா சேர்ந்து செய்யலாம்னு சொன்னவங்கள்லாம் ஓடி ஒளிந்து விட்டார்கள். ஒரு வேலைய செய்ய ஒத்துக்கிட்டால், அதுல நேர்மை இருக்கணும், என் நேர்மை மேல எனக்கு நம்பிக்கையிருக்கு. அதனாலதான கடைசிவரைக்கும் இருந்து அந்தப் படத்தை முடிச்சிக் கொடுத்தேன்.
என்னைப் பொறுத்தவரைக்கும் இந்தத் தரத்துலயாவது படம் வந்துதேன்னு நிம்மதிப் பெருமூச்சுவிட்டேன். பச்சையா சொல்லணும்னா, வேற மாதிரி சொல்லணும், அதை பிரிண்ட் பண்ண முடியாது, ” என்று பொங்கித் தள்ளியிருக்கிறார்.
செல்வராகவன் முதுகில் குத்திய அந்த 325 பேரில் யார் யார் உள்ளனர் என்பதைத் தேடிக் கண்டுபிடிக்கும் பொறுப்பை யார் ஏற்றுக் கொள்ளப் போகிறார்கள்….விரைவில் அந்தப் பட்டியலை யாராவது ஒருவர் வெளியிட மாட்டார்களா என்ன…?