‘சாட்டை’ படத்தின் மூலம் அறிமுகமான மகிமா முதல் படத்திலேயே திறமையான புதுமுகம் என்ற பெயர் பெற்றார். தொடர்ந்து ‘மொசக்குட்டி, அகத்திணை’ என அவர் நடித்த சில படங்கள் வந்திருந்தாலும் ஒரு பெரிய வெற்றிக்காகக் காத்திருக்கிறார்.
நிறைய படங்களில் நடிப்பதை விட நல்ல படங்களில் நடிப்பதையே விரும்புகிறேன் என அவர் கூறியுள்ளார்.
“என்னை நிறைய படங்களில் நடிக்கக் கேட்டது உண்மையே. நான் படித்துக் கொண்டிருந்ததால் நடிக்க முடிய வில்லை. இப்போது படிப்பை முடித்து விட்டேன். இடையில் நான் நடித்த ‘மொசக்குட்டி, அகத்திணை’ ஆகிய படங்கள் வெளிவந்தன.
தற்போது, விஜய் சேதுபதியுடன் ‘மெல்லிசை’ , தினேஷுடன் ‘அண்ணனுக்கு ஜே’ , ‘புரவி எண்’ ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், போஜ்பூரி என ஐந்து மொழிகளில் ஒரே படத்தில் நடிக்கிறேன். பூரி ஜெகன்நாத் சார் தம்பி சாய்ராம் சங்கர்தான் ஹீரோ, வினோத் விஜயன் என்பவர் இந்தப் படத்தை இயக்குகிறார். ராஜீவ் ரவி காமிரான்னு எல்லோருமே ஜாம்பவான்கள். ஷூட்டிங் பரபரப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது.
பொறுமையா இருந்தா சாதிக்கலாம்கிற வேத வாக்கின் மகிமையை உணர்ந்தவள். எத்தனை படம் நடிச்சோம்ன்னு கணக்குப் பார்க்க நான் தயாரில்லை. நடிச்சதுல எத்தனை படம் நல்ல படம்னு கணக்கு பாக்குறவ நான். எனக்கு வயசு இருக்கு, பொறுமையாக நின்னு சாதிப்பேன்,” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் மகிமா.