பல முன்னணி இயக்குனர்களின் படங்கள், பல வெற்றிப் படங்களின் படத் தொகுப்பாளராகப் பணியாற்றிய ஆண்டனி முதல் முறையாக இயக்குனராகி இயக்கியிருக்கும் படம் ‘நைட் ஷோ’.
சத்யராஜ், அனு மோள், வருண் மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்டு டிரைலரை சூர்யா வெளியிட, இயக்குனர்கள் கௌதம் மேனன், எஸ்.ஜே.சூர்யா, கே.வி.ஆனந்த் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் இயக்குனர் அவதாராம் எடுத்துள்ள ஆண்டனியைப் பாராட்டி சூர்யா பேசியதாவது,
“என்னை மாற்றிய பல முக்கியமான படங்களின் படத் தொகுப்பாளராக ஆண்டனி இருந்திருக்கிறார். இன்னைக்கு திரைக்கதை, படத் தொகுப்பு, இயக்கம் என அவர் பெயரைப் பார்க்கும் போது ஒரு நடிகரையும் பார்க்க முடிந்தது.
எல்லா கேரக்டருக்கும் விழுந்து விழுந்து நடிச்சிக் காட்டியிருக்காரு. எப்பவுமே ஏதாவது வித்தியாசமான பண்ணிக்கிட்டே இருக்கணும்னு அவர் நினைப்பாரு. அது ஒரு சின்ன முயற்சியா கூட இருக்கலாம், எதைப் பத்தி வேணா அது இருக்கலாம், அவருடைய திறமையை வளர்த்துக்கிட்டேயிருப்பாரு.
ஒவ்வொரு படம் பண்ணும் போதும் அவருக்குன்னு ஒரு கருத்து இருக்கும். இதையெல்லாம் ஆடியன்ஸ் ரசிக்க மாட்டாங்கன்னு நாம கஷ்டப்பட்டு நடிச்சதைக் கூட வெட்டித் தள்ளிடுவாரு. அவரோட படத்தை அவரே எடுத்து அவரே வெட்டறதைப் பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு.
‘காக்க காக்க’ டிரைலரை அந்த அளவுக்கு பேச வைச்சதுல ஆண்டனியோட பங்கு அதிகம். ஆண்டனியைப் பார்த்து சினிமாவுல எடிட்டரா வரணும்னு நினைக்கிற பெரிய கூட்டமே இருக்கு. நிறைய இளைஞர்களுக்கு இன்ஸ்பிரேஷனா இருந்திருக்காரு.
ஆண்டனியில் அடுத்த ஸ்டெப், இயக்குனராகியிருக்காரு, அவர் வெற்றியடைய என்னுடைய வாழ்த்துகள்,” என்றார் சூர்யா.