‘கோலி சோடா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான விஜய் மில்டன் இயக்கி வரும் படம் ‘10 எண்ணுறதுக்குள்ளே’.
விக்ரம், சமந்தா மற்றும் பலர் நடிக்கும் இந்தப் படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவும், ஏ.ஆர்.முருகதாஸும் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இந்தப் படம் ஆரம்பமான நாளிலிருந்தே படத்தைப் பற்றிய பல்வேறு விதமான செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. ஒரு கட்டத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுவிட்டது என்று கூட செய்திகள் வெளியாகின.
அனைத்து விதமான வதந்திகளுக்கும் முற்றுப் புள்ளி வைக்கும் விதத்தில் தற்போது படத்தின் வெளியீட்டுத் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
அக்டோபர் மாதம் 21ம் தேதி ஆயுத பூஜை தினத்தன்று இப்படத்தை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளார்கள். ஆயுத பூஜை, விஜயதசமி, மொகரம், சனி, ஞாயிறு என தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் விடுமுறை உள்ளதால் அந்தத் தேதியில் தங்களது படத்தின் வெளியீட்டை இப்போதே ‘புக்’ செய்துவிட்டார்கள்.
இந்த மாதத்துடன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைய உள்ளதாம். ஆக்ஷன், காதல், காமெடி என அனைத்தும் கலந்த ஒரு கமர்ஷியல் படமாக ‘10 எண்ணுறதுக்குள்ளே’ உருவாகி வருகிறது.