வெள்ள நிவாரண நிதியாக நடிகர், நடிகைகள் அளிக்கும் தொகை பற்றிய பேச்சு மக்களிடையே பரபரப்பாக இருக்கிறது.
தமிழ்நாட்டில் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக சூப்பர் ஸ்டார் ஆக கொண்டாடப்பட்டு வரும் ரஜினிகாந்த், உலக நாயகனாக கொண்டாடப்பட்டு வரும் கமல்ஹாசன் ஆகியோர் அளித்துள்ள நிவாரணத் தொகை குறைந்த பட்ச லட்சங்களில் இருப்பதுதான் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மற்ற மாநிலங்களிலிருந்து வந்து தமிழில் நடிகைகளாகியுள்ள ஹன்சிகா 15 லட்சமும், ஸ்ரீதிவ்யா 10 லட்சமும் அளித்துள்ள போது ரஜினிகாந்த், கமல்ஹாசன் அந்த இளம் நடிகைகள் அளவிற்கே தொகையை அறிவித்துள்ளது ஆச்சரியமளிக்காமல் என்ன செய்யும்.
தெலுங்கு நடிகரான பவன் கல்யாண் 2 கோடியும், ஹிந்தி நடிகரான ஷாரூக் கான் 1 கோடியும் அளித்துள்ள போது, தமிழக மக்கள் மீது அதிக அக்கறையுள்ளதாக காட்டிக் கொள்ளும் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அளித்துள்ள தொகை மக்களிடம் அவர்கள் மீது ஒரு வெறுப்பை உண்டாக்கியிருக்கிறது.
ரஜினி கமலாவது பரவாயில்லை ஏதோ ஒரு தொகையை அளித்துள்ளார்கள், ஆனால், விஜய், அஜித், விக்ரம், சிம்பு போன்ற முன்னணி நடிகர்களும், நயன்தாரா, த்ரிஷா, சமந்தா போன்ற முன்னணி நடிகைகளும் தங்களது உதவி பற்றி வாயே திறக்காமல் இருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக உள்ளது.
தங்கள் படங்கள் வெளியாகும் போது மட்டும் ரசிகர்களை பயன்படுத்திக் கொண்டு அந்தப் படங்களை ஓட வைக்கும் இவர்கள் மக்களுக்கு இப்படி ஒரு சோகம் வந்துள்ள போது ஓடி ஒளிவது ஏன் ? என்று திரைப்பட ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது கோபங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள்.