கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் கே.எம். சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘ஐரா’. கலையரசன், யோகி பாபு முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் முதல் பார்வை, டீசர் ஏற்கெனவே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக்கியது.
நயன்தாரா நடிக்கும் முதல் இரட்டை வேடப் படமான ‘ஐரா’ படத்தின் ‘மேக தூதம்’ பாடல் நயன்தாராவின் வித்தியாசமான தோற்றத்திற்காக ரசிக்கப்பட்டு வருகிறது.
அந்தப் பாடல் பற்றி படத்தின் இயக்குனர் சர்ஜுன் கூறுகையில்,
“இந்தப் பாடலை ஏற்கெனவே கேட்டவர்கள் எளிதாக இதை கண்டுபிடித்திருப்பார்கள் என நம்புகிறேன். ‘பவானி’ என்ற கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளை அழகாக வெளிப்படுத்தும் பாடல். அவளுடைய கனவுகள், அபிலாஷைகள், தனக்கு பிடித்த ஆன்மாவுடனான மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கைக்காக ஏங்குவது போன்றவற்றை வெளிப்படுத்தும் படல்.
பத்மப்ரியா ராகவன், தாமரை, சுந்தரமூர்த்தி ஆகியோரின் சிறப்பான முயற்சிகளைப் பாராட்டுகிறேன். ஸ்லோ பாய்ஸனாக ரசிகர்கள் மனதில் இறங்கிக் கொண்டிருக்கும் இந்த அழகான பாடலை கொடுத்த மூவரையும் பிரித்துப் பார்க்க முடியாது.
தாமரை எப்பொழுதும் உணர்ச்சிகளின் அமுதம், அவரின் பாடல் வரிகள் மூலம் நிபந்தனையற்ற அன்பின் மேன்மையை உயர்த்துவார். பாடல் உருவாக்கும்போது இசையமைப்பாளர் சுந்தரமூர்த்தி பாடல் வரிகளும், குரலும் மிக தெளிவாக இருக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனம் செலுத்தினார். இதனால் மென்மையான இசையை இழைய விட்டிருந்தார். அது தான் பாடலில் தாக்கத்தை தீவிரப்படுத்தியது.
பாடலில் வெற்றிக்கு பத்மப்ரியா ராகவனின் பங்கும் மிக முக்கியமானது. காட்சிகளும், பாடலின் சூழ்நிலையும் மற்றும் நயன்தாராவின் பிரம்மாண்டமான திரை ஆளுமையும் பாடலுக்கு கூடுதல் மைலேஜாக இருக்கும் என நம்புகிறேன்.
இந்தப் படம் நயன்தாராவின் 63வது திரைப்படமாகும். படத்தை இயக்கும் போது அவரது நடிப்பை ஒரு ரசிகராக பார்த்து வியந்தேன். அவர் தன் நடிப்பைத் தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டே இருக்கிறார். இந்தப் படத்தில் நயன்தாராவை இரு பரிமாணங்களில், குறிப்பாக ‘பவானியின்’ கதாபாத்திரத்தை பார்த்து ரசிகர்கள் உற்சாகமடைவார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன்,” என்றார்.