‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் பிரபலமானவர் இசையமைப்பளார் சத்யா.
“நெடுஞ்சாலை, தீயா வேலை செய்யணும் குமாரு, கதை திரைக்கதை வசனம் இயக்கம், காஞ்சனா – 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ உட்பட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
தனது இசை பயணம் குறித்து அவர் கூறியதாவது ….
“என்னுடைய அப்பா இசைத் துறையில் சாதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார், அவரது கனவை நிறைவேற்ற பாடு பட்டேன்.
சிறு வயதிலே கர்னாடக சங்கீதம் பயின்றேன். கங்கை அமரன், ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பலரிடம் கீபோர்டு பிளேயயராக பணியாற்றி இருக்கிறேன். பல விளம்பரப் படங்களுக்கு இசையமைத்தேன்.
‘சில்லுனு ஒரு காதல்’ கிருஷ்ணா இயக்கிய ‘ஏன் இப்படி மயக்கினாய்’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானேன். ஆனால் ஜெய், அஞ்சலி நடித்த ‘எங்கேயும் எப்போதும்’ என்னை பிரபலமாக்கியது.
அதைத் தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் வேலை செய்தேன். சமீபத்தில் வெளியான ‘உன்னோடு கா, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ ஆகிய படப் பாடல்களின் வெற்றி எனக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.
‘உன்னோடு கா’ படத்தில் என் மகள் வைமித்ரா ஒரு பாடலைப் பாடியுள்ளார். ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தில் ‘ஆரவல்லி…சூரவல்லி’ பாடல் மிகவும் பிரபலமாகி உள்ளது.
தற்போது ஜெட்லி, அசுரகுலம், இயக்குனர் பார்த்திபனின் அடுத்த படம் உட்பட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறேன்.
இதுவரை என் இசையில் நடிகைகள் யாரும் பாடியதில்லை. பாடலுக்குத் தேவைப்படும் பட்சத்தில் அவர்களைப் பாட வைப்பேன். ஜெட்லி படத்தில் பின்னணி இசை புதிய வடிவில் இருக்கும்,” என உற்சாகத்துடன் சொல்கிறார் சத்யா.