‘கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கொண்டே கல் எறிய வேண்டாம்’ என்ற பழமொழி பழைய மொழியாக இருந்தாலும் இன்றும் அதைக் கடைபிடிக்கும் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
சிலர் அப்படிச் செய்யாமல் கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கொண்டு கல் எறிந்து கொண்டுதான் இருக்கிறார்கள். சில சமயங்களில் அது நம்மையும் திருப்பித் தாக்கிவிடும் என்பது அவர்களுக்கு வரும் போதுதான் தெரியும்.
அப்படி ஒரு நிலைமை தற்போது ‘இறைவி’ படத்தை இயக்கியுள்ள கார்த்திக் சுப்பராஜுக்கு வந்துள்ளது.
‘இறைவி’ படத்தில் தயாரிப்பாளர் கதாபாத்திரம் ஒன்று மிகவும் தவறாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதை எதிர்த்து படம் வெளிவந்த அன்றே சிலர் குரல் கொடுக்க ஆரம்பித்தார்கள்.
அதோடு படத்தின் நாயகன் எஸ்.ஜே.சூர்யா ஒரு காட்சியில் தயாரிப்பாளர் கெட்ட வார்த்தையால் திட்டுவது போன்று காட்சியும் வைக்கப்பட்டுள்ளதற்கு கடும் கண்டனம் எழுந்தது.
அதைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் படத்தைப் பார்த்தார்கள். இன்று நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் கார்த்திக் சுப்பராஜுக்கு ‘ரெட்’ போடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பல வருடங்கள் கழித்து இயக்குனர் ஒருவருக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் போட்டிருப்பது திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், கார்த்திக் சுப்பராஜ் ‘ரெட்’ போட்டதை எதிர்ப்பாரா அல்லது தவறுக்கு வருத்தமோ அல்லது மன்னிப்போ தெரிவிப்பாரா என திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.
நாளை இந்த விவகாரம் மேலும் சூடு பிடிக்க வாய்ப்புள்ளது.