இயக்குநர் கொல்லபுடி ஸ்ரீனிவாஸ் தனது முதல் படமான ‘பிரேம புஸ்தகம்’ படத்தினை இயக்கிக் கொண்டிருந்தபோதே, எதிர்பாராத விபத்தொன்றில் மரணமடைந்தார். அவரது நினைவாக ‘கொல்லபுடி ஸ்ரீனிவாஸ் மேமோரியல் ஃபௌண்டேஷன்’ எனும் தொண்டு நிறுவனம் துவங்கப்பட்டு கடந்த 18 ஆண்டுகளாக இந்திய அளவில் சிறந்த படம் இயக்கிய முதல் பட இயக்குநர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு விருதளித்து கவுரவித்து வருகிறது.
இந்திய சினிமா உலகில் கவுரவத்துக்குரிய விருதாகப் பார்க்கப்படும் இந்த விருது விழாவில் இந்த ஆண்டு கன்னட திரையுலகின் முதன்மை நடிகர் சிவ ராஜ்குமார் கலந்து கொள்கிறார். கொல்லப்புடி ஸ்ரீநிவாஸ் நினைவு விரிவுரையாக “The Making of an Actor” எனும் தலைப்பில் நடிகர் பொம்மன் இரானி பேசுகிறார். கௌரவ விருந்தினர்களாக இயக்குநர் பிரியதர்ஷன், சுதிர் மிஸ்ரா, டாக்டர் ஜெயசுதா கபூர் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் சிறந்த புதுமுக இயக்குநருக்கு வழங்கப்படும் செய்யும் கொல்லபுடி ஸ்ரீனிவாஸ் விருது, இந்த முறை இயக்குநர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்படுகிறது.
அவர் இயக்கி விருதுகளையும் பாராட்டுகளையும் குவித்த ‘லென்ஸ்’ படத்துக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
வரும் 12ம் தேதி சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெறவிருக்கும் விழாவில் இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இந்த விருதினை பெறவிருக்கிறார்.
‘லென்ஸ்’ படத்திற்காக ‘கொல்லப்புடி ஸ்ரீனிவாஸ் விருது’ பெற உள்ள ஜெயபிரகாஷ் இது குறித்து பேசுகையில்
“ஒரு நடிகனாகும் ஆசையில்தான் நான் சென்னைக்கு வந்தேன். ஆனால் அதில் பிரேக் கிடைக்கவில்லை. எனவே என்னிடம் உள்ள திறமையை நம்பி நான் முதலில் எழுதிய ஸ்கிரிப்ட்தான் இந்த ‘லென்ஸ்’ படம்.
‘லென்ஸ்’ படம் பத்தி நான் இப்ப ரொம்ப பேசல. ஏன்னா இப்போதைய சமூகத்தில் நாம் எதிர்நோக்கும் முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசும் படம் இது. கம்ப்யூட்டர், இன்டர்நெட், சோஷியல் மீடியாவால் ஆதிக்கம் செலுத்தப்படும் இன்றைய உலகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் கதைதான் இந்தப் படம்.
சமீபத்தில் கூட பேஸ்புக்கில் ஒரு பெண்ணின் முகத்தை மார்ஃபிங் செய்து போட்டோ வெளியிட்டதால் அந்தப் பெண் இறந்தாக செய்தி வந்தது. இது போல நிறைய செய்திகளை நாம் தினமும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் மறந்து போய்விடுகிறோம். இந்தப் படம் அந்த மாதிரி செய்திகளை மறக்க வைக்காது. எப்பவுமே ஞாபகப்படுத்திக்கிட்டிருக்கும். நம்மை இன்னும் பொறுப்புள்ளவர்களாக்கும் என நினைக்கிறேன்,” என்கிறார் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்.