நல்ல படம் எடுத்தால் ஓடும் – கே.பாக்யராஜ்

இந்தியன் சினி மேக்கர்ஸ் ஜெயக்குமார் தயாரிக்கும் ‘சிரிக்க விடலாமா’ படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

தயாரிப்பாளர் ஜெயக்குமார் பாடல்களையும் எழுதி இசையும் அமைத்திருக்கிறார் என்பதும் தனது ஜேகே நிறுவனம் மூலமாகவே இசையையும் வெளியிடுகிறார்.

இயக்குனர் கே.பாக்யராஜின் உதவியாளர் V.B.காவியன் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்தப்படத்தில் V.R.விநாயக், நிதின் சத்யா, பவர்ஸ்டார் சீனிவாசன் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். இவர்களுக்கு ஜோடியாக புதுமுக நாயகி சௌமியா, லீஷா மற்றும் தீபா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர்.

முக்கியமான கதாபாத்திரத்தில் ஆனந்தராஜ், மகாநதி சங்கர், சந்தானபாரதி, கோவை செந்தில் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ரமேஷ் கமல் மற்றும் அக்சயா ஆனந்த் நடனம் அமைத்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் முத்து மனோகர், எடிட்டர் முத்து கொடப்பா.

“களவு செய்யப்போறோம், ராஜாவுக்கு ராஜா, சேவல் சண்டை” என்று முதல் படம் வெளியாகும் முன்பே பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இப்படத்தின் நாயகன் விநாயக், மலையாளத் திரையுலகத்திலிருநது தமிழுக்கு வந்திருக்கிறார்.

இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் கே.பாக்யராஜ், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இசையமைப்பாளர் எஸ் எஸ் குமரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய பவர் ஸ்டார்,

“சி எம் ஆவது எவ்வளவு கஷ்டம், அடிதடி, சண்டை…”, நானும் சி.எம் மா நடிச்சுருக்கேன். கே பாக்யராஜ் நண்பராக நடித்திருக்கிறார். ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்திற்குப் பிறகு, ‘சிரிக்க விடலாமா’ தெறிக்கவிடும்.” என்கிறார்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது,

“ஹீரோவுக்கு பில்ட் அப் சீன் யோசிச்சே பல படைப்பாளிகள் காணாமல் போய்விட்டார்கள். ஆனால், ஹீரோக்கள் 30 லிருந்து 100 கோடிகள் சம்பளம் வாங்க ஆரம்பித்துவிடுகிறார்கள். அவர்களது ரசிகர்கள் அவர்களுக்கு கட் அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் தியேட்டரில் டிக்கெட் எடுக்கும் போது ஆயிரம் ஆயிரத்து ஐநூறு என்று டிக்கெட் விலை வைக்கிறார்கள். எப்படி அவனால் படம் பார்க்க முடியும் ?.

ஆக, பெரிய நடிகர்கள் அவர்களது ரசிகர்களுக்கே விசுவாசமாக இருக்கமாட்டேன் என்கிறார்கள். நல்லா சம்பாதிச்சுட்டு ரிடையர்ட் ஆகும் போது முதலமைச்சர் கனவு வேற. எந்த பெரிய நடிகராவது அரசு நிர்ணயித்த கட்டணத்தில் தான் டிக்கெட் விற்கவேண்டும், என் சம்பளத்தைக் குறைத்துக் கொள்கிறேன் என்று சொல்கிறார்களா ?. தங்களது ரசிகர்களுக்கே விசுவாசமாய் இருக்க முடியாதவர்கள் எப்படி முதல்வராகி ஒட்டுமொத்த மக்களுக்கும் விசுவாசமாய் இருப்பார்கள்.

தியேட்டர் டிக்கெட் விலை அதிகம் என்பதால் தான் தமிழ் ராக்கர்ஸில் படத்தை விடுகிறான். தமிழ் ராக்கர்ஸை பொதுமக்களும் கொண்டாடுகிறார்கள்.. ரசிகனுக்கும் திரையிடுவதற்குமான இடைவெளியை நாம் களையவேண்டும்… அதை விடுத்து, யார் மீதும் குற்றம் சுமத்திக் கொண்டிருப்பதில் என்ன பயன்? அவரை வைத்து படமெடுத்த தயாரிப்பாளர்களையே காப்பாற்ற முடியாத விஷால் எப்படி தயாரிப்பாளர் சங்கத்தைக் காப்பாற்றப்போகிறார்? நல்லவேளை, இன்றைக்கு ஒருத்தர் முதல்வராகிவிட்டார், இல்லாவிட்டால் விஷால், கவர்னர்ட்ட போயி நான் முதல்வராகி தமிழ்நாட்டைக் காப்பாற்றுகிறேன் என்று சொன்னாலும் சொல்வார்…

ரசிகர்கள் தயவுசெய்து பெரிய நடிகர்களை நம்பாதீர்கள்… புதுமுகங்கள் நடித்த நல்ல படங்களுக்கு ஆதரவு கொடுங்கள். என் எஸ் கேவிலிருந்து இன்று வரை நகைச்சுவை நடிகர்கள் தான் உங்களைச் சிரிக்கவும் சிந்திக்கவும்வைக்கிறார்கள். அந்த வகையில் உங்களைச் சிரிக்க வைக்கும் படமாக ‘சிரிக்க விடலாமா’,வை எடுத்திருக்கிறார்கள். வெற்றி பெற வாழ்த்துகள்,” என்றார்.

கே.பாக்யராஜ் பேசும் போது,

“எல்லோரும் தியேட்டருக்கு வந்து பார்ப்பதைத் தான் விரும்புகிறார்கள், குறிப்பாக இளைஞர்கள். தியேட்டரில் டிக்கெட் விலை கூடிவிட்டதால் குடும்பஸ்தர்களாக வந்து படம் பார்க்க இயலவில்லை என்பது உண்மைதான். மொத்தத்தில் நல்ல படமாக எடுத்தால் ஓடத்தான் செய்கிறது.

சிரிக்க விடலாமா இயக்குநர் காவியன், எனது சிறந்த உதவியாளர்களுள் ஒருவரான காளியின் உதவியாளர். ஆகவே சிறப்பாக பணியாற்றியிருப்பார்,” என்றார்.

Read Previous

காதல் கண் கட்டுதே – விமர்சனம்

Read Next

Maanagaram set for 10 March

Most Popular