உள்ளங்களையில் அனைத்தும் வந்துவிட்ட இந்த டிஜிட்டல் யுகத்தில் அது வழியாக குற்றங்களும் பெருகி வருகின்றன.
ஆபாசப் புகைப்படங்கள், வீடியோக்கள் பகிர்வு என்பது மட்டுமே பலருக்கும் தெரிந்த ஒன்றாக இருக்கிறது. ஆனால், அவற்றையும் மீறி ‘சைபர் கிரைம்’ என அழைக்கப்படும் பல இணையதளக் குற்றங்கள் நடந்து வருகின்றன.
அவற்றை மையமாக வைத்து சங்கர் – சுரேஷ் இயக்கியுள்ள படம்தான் ‘இணையதளம்’.
கணேஷ் வெங்கட்ராம், ஸ்வேதா மேனன், சுகன்யா, ஈரோடு மகேஷ், கௌசிகா மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குனர்கள் சங்கர் – சுரேஷ் கூறியதாவது,
‘பின்லேடன் கொல்லப்பட்ட சமயத்தில் அமெரிக்க ராணு அதிகாரி, இது பழிவாங்கும் செயல் அல்ல, நீதி,’ என்றார். அதை மையமாக வைத்துத்தான் இந்தப் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
இன்று நாட்டில் பல்வேறு விதமான சைபர் குற்றங்கள் நடந்து வருகின்றன. தினமும் நூற்றுக் கணக்காக புகார்கள் வருவதாகச் சொல்கிறார்கள். நம் நாட்டில் சைபர் கிரைம் என்பதற்கான தனி புரிவு ஒன்று பெங்களூரில் மட்டும்தான் செயல்பட்டு வருகிறது. மற்ற இடங்களில் இப்போதுதான் நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளார்கள்.
இன்றைய இணையதள உலகத்தில் ஒவ்வொருவரும் அவர்களுடைய இணையதளப் பயன்பாட்டை எப்படிப் பாதுகாப்புடன் பயன்படுத்த வேண்டும் என்பதெல்லாம் இந்தப் படத்தில் இருக்கும்.
கணேஷ் வெங்கட்ராம் காவல் துறை அதிகாரியாகவும், ஸ்வேதா மேனன் சைபர் கிரைம் பிரிவு அதிகாரியாகவும் நடித்துள்ளார்கள். ஈரோடு மகேஷ் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இணையதளம் பற்றிய படம் என்பதால் தொழில்நுட்ப விஷயத்தில் அதிக கவனம் செலுத்துகிறோம். டால்பி அட்மாஸ் ஒலிப்பதிவு தொழில்நுட்பத்தில் படம் வெளியாக உள்ளது.
இந்தப் படத்திற்காக நிறையவே ஆராய்ச்சி செய்துள்ளோம். ஒரு முக்கியமான பதிவாக இந்தப் படம் தமிழ் சினிமாவில் இருக்கம்,” என்கிறார்கள்.