சற்குணம் தயாரிப்பில், அவருடைய உதவியாளர் தாஸ் ராமசாமி இயக்கத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்திருக்கும் படம் ‘டோரா’.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நயன்தாரா நடிக்கும் படங்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. அந்த விதத்தில் ‘டோரா’ படமும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தை தமிழகம் முழுவதும் ஆரா சினிமாஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
எந்த மாதிரியான படமாக இருந்தாலும் புதுமையான முறையில் படத்தை விளம்பரப்படுத்தினால்தான் படத்தை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க முடியும் என்பதை புரிந்து கொண்டு, ‘டோரா’ படத்தை விளம்பரப்படுத்த புதிய விளம்பர யுக்தியை கையாண்டுள்ளது ஆரா சினிமாஸ்.
அமானுஷ்யமான ஒரு காரை மையமாகக் கொண்டு இப்படம் படம் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே படத்தில் இடம்பெறும் அந்த காரைப் போன்று டம்மியான கார்களை உருவாக்கி, சென்னையில் உள்ள சத்யம், எஸ்கேப், ஐனாக்ஸ், பிவிஆர், தேவி, லக்ஸ், சங்கம் உட்பட பல தியேட்டர்களில் காட்சிக்கு வைத்திருக்கின்றனர்.
அந்தக் கார் உடன் செல்ஃபி எடுத்து அனுப்பி வைத்தால், அவர்களில் இருந்து சிலர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு செய்யப்பட்ட அதிர்ஷ்டசாலிகள் நயன்தாராவை சந்திக்கவும், அவருடன் செல்ஃபி எடுத்துக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
‘டோரா’ படம் வரும் மார்ச் 31ம் தேதி வெளியாக உள்ளது.