பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அர்ஜுனின் 150வது படமாக கடந்த வாரம் வெளிவந்த படம் ‘நிபுணன்’
அருண் வைத்யநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த த்ரில்லர் படத்திற்கு ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் படத்தின் தயாரிப்பாளர்கள் உமேஷ், சுதன் சுந்தரம், ஜெயராம், தயாரிப்பாளர்களில் ஒருவரும் இயக்குனருமான அருண் வைத்யநாதன், நடிகர் அர்ஜுன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் அருண் வைத்யநாதன்,
“நிபுணன்’ படம் எங்களது இரண்டு வருட உழைப்பு. பல தடங்கல்களைக் கடந்து இந்தப் படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. டிக்கெட் கட்டணம் உயர்ந்த பின் மக்கள் தியேட்டர் வருவது குறைந்துவிட்டது என்ற பேச்சு இருந்தது.
கடந்த வாரம் வெளிவந்த ‘விக்ரம் வேதா’ படத்தை வெற்றி பெற வைத்தார்கள். அதே போல கடந்த வாரம் வெளிவந்த எங்களது ‘நிபுணன்’ படத்தையும் வெற்றி பெற வைத்துள்ளார்கள். இப்படத்தின் கதையை எழுதும் போதே எனக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது.
அர்ஜுன் சாரின் 150ஆவது படத்தை இயக்கியது எனக்கு மிகப் பெருமையான ஒன்று. இந்த படத்தில் என்னுடன் பணி புரிந்த பிரசன்னா, வரலட்சமி, சுமன், சுஹாசினி, கிருஷ்ணா, வைபவ் உள்ளிட்ட அனைத்து நடிக, நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் மற்றும் இந்தப் படத்திற்கு நல்ல விமர்சனம் எழுதிய பத்திரிகையாளர்கள், படத்தை ரசித்த ரசிகர்கள் அனைவருக்கும் நிறைய நன்றியை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் அர்ஜுன்,
“நன்றி அறிவிப்புக்கு என்று ஒரு விழாவை நடத்தி இருப்பதற்காக இந்த தயாரிப்பு நிறுவனத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த 150 பட பயணத்தில் என்னுடன் பணிபுரிந்த அத்தனை திரைக் கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கதையில் இருந்த அற்புதத்தை திரையில் கொண்டு வந்தமைக்கு இயக்குனர் அருண் வைத்யநாதனுக்கு நன்றி,” என்றார்.
தயாரிப்பாளர் உமேஷ் பேசுகையில்,
“பட வெளியீட்டுக்கு முன்னதாகவே பத்திரிகையாளர்களுக்கு படத்தைக் காண்பித்தோம். அனைவரும் படத்தைப் பாராட்டி, படத்தின் வெற்றிக்கு நல்ல அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். மக்களும் தியேட்டர்களுக்கு வந்து படத்தை ரசித்து இந்த அளவிற்கு ஒரு பெரிய வெற்றியை எங்களுக்குக் கொடுத்துள்ளனர்,” என்றார்.