“ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது” என்று கூறிக் கொண்டுதான் கமல்ஹாசன் ‘பிக் பாஸ்‘ நிகழ்ச்சிக்குள் வந்தார்.
30 கேமராக்கள் ‘பிக் பாஸ்’ வீட்டிற்குள் இருக்கும் நிகழ்வுகளை அப்படியே பார்த்துக் கொண்டிருக்கிறது என்று சொன்னார்கள். நிகழ்ச்சியின் லோவோக ஒரு கண்தான் இடம் பெற்றுள்ளது.
இப்போது கோடிக்கணக்கான கண்கள் கமல்ஹாசனை நோக்கியே உள்ளது. நேற்று இரவு நிகழ்ச்சியில் ஓவியா தற்கொலைக்கு முயன்றதும் (அது நடிப்பா அல்லது உண்மையான என்ற குழப்பம் இன்னும் நீடிக்கிறது) , அடுத்து வீட்டை வெளியேற முடிவு செய்ததும் என்ன ஆனது என்று பலருக்கும் புரியவில்லை. கடந்த சில நாட்களாகவே நிகழ்ச்சியே குழப்பமாகத்தான் இருந்தது. யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.
ஓவியா நிகழ்ச்சியை விட்டு ஓடி விட்டாரா அல்லது அவரை ஒளித்து வைத்திருக்கிறார்களா என்பதை இன்னமும் சஸ்பென்ஸ் ஆகவே வைத்திருக்கிறார்கள்.
சில நிமிடங்களுக்கு முன்பு இன்றைய ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் புரோமோ சோக கீதம் ஒலிக்க ஒளிபரப்பானது. இன்று சனிக் கிழமை என்பதால் கமல்ஹாசனே புரோமோவில் வந்து வழக்கம் போல் கவிதை நடையில் மர்ம முடிச்சைத் தொடர்கிறார்.
“கலங்கிய உள்ளம், புலம்பிய இல்லம், துலங்குமா உண்மை,” என இன்று இரவு பார்க்கலாம் என்கிறார்.
பலரின் மனதில் ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ள ஓவியாவிற்கு இப்படி ஒரு நிலைமை வரக் காரணமாக இருந்தவர்களை கமல்ஹாசன் கண்டிக்கவில்லை, அவர்கள் செய்யும் தவறுகளை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், கடந்து போய்விட்டார் என்று இந்த வாரம் கமல்ஹாசனை நோக்கி கண்டனக் கணைகள் பாய்ந்துள்ளன.
சமூக வலைத்தளங்களில் ‘பிக் பாஸ் ஹிந்தி’ சல்மான் கானைப் போல கமல்ஹாசன் நிகழ்ச்சியை நேர்மையாக நடத்தவில்லை என்று பலரும் குற்றம் சாட்டுகிறார்கள்.
நேயர்களின் சந்தேகங்களுக்கும், ஓவியாவின் நிலைமைக்கும், மற்ற போட்டியாளர்களின் அத்து மீறல்களுக்கும் கமல்ஹாசன் என்ன ‘கட்டிப்புடி வைத்தியம்’ வைத்திருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ள இன்று இரவு 8.30 மணிக்காக பலரும் காத்திருக்கிறார்கள்.