ஒரே நாளில் முக்கியமான மூன்று படங்கள் மோதப் போகும் நாளாக ஆகஸ்ட் 11ம் தேதி அமைய உள்ளது.
அன்று, தனுஷ், அமலா பால், கஜோல் மற்றும் பலர் நடித்துள்ள ‘விஐபி 2’, உதயநிதி ஸ்டாலின், நிவேதா பெத்துராஜ் மற்றும் பலர் நடித்துள்ள ‘பொதுவாக எம்மனசு தங்கம்’, புதுமுகம் வசந்த் ரவி, ஆன்ட்ரியா, அஞ்சலி மற்றும் பலர் நடித்துள்ள ‘தரமணி’ ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.
இந்த மூன்று படங்களுக்குமான தியேட்டர் புக்கிங் வேலைகள் பரபரப்பாக நடந்து வருகின்றன. டிக்கெட்டுகளுக்கான முன்பதிவுகளும் ஆரம்பமாகிவிட்டன. முன்பதிவு வரவேற்பைப் பொறுத்து கூடுதல் தியேட்டர்கள் படங்களுக்குக் கிடைக்கும்.
மூன்று படங்களுமே இளைஞர்களைக் கவரும் விதத்தில் எடுக்கப்பட்டுள்ள படங்களாகவே உள்ளன.
ஜிஎஸ்டி வரி விதிப்பிற்குப் பிறகு வெளிவந்த படங்களில் ஓரிரு படங்கள்தான் ரசிகர்களின் வரவேற்பை அதிகம் பெற்றன.
அந்தக் குறையை வரும் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகும் மூன்று படங்களுமே தீர்க்கும் என்ற எதிர்பார்ப்பு திரையுலகினரிடம் எழுந்துள்ளது. மூன்று படங்களும் வெவ்வேறு விதமான படங்கள் என்பதே அதற்குக் காரணம்.
அப்படி மூன்று படங்களும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றுவிட்டால், அடுத்தடுத்து வரும் படங்களுக்குத் தெம்பாக இருக்கும்.