பிரபல பெண் பத்திரிகையாளர் தன்யா ராஜேந்திரன், சில தினங்களுக்கு முன்பு, விஜய் நடித்து வெளிவந்த ‘சுறா’ படம் குறித்து ஒரு கருத்தை அவருடைய டிவிட்டரில் பதிவு செய்தார்.
விஜய் படம் குறித்து அவர் எப்படி அப்படி சொல்லலாம் என விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அந்த பெண் பத்திரிகையாளர் குறித்து தரக் குறைவான கமெண்ட்டுகளைப் பதிவு செய்தனர். அவர் ‘சுறா’ படம் குறித்த அந்த டிவிட்டர் பதிவை நீக்கிய பிறகும் விஜய் ரசிகர்கள் தொடர்ந்து அவரை விமர்சித்து வந்துள்ளதாகத் தெரிகிறது.
அதன் பின் அவர் சென்னை காவல் துறையில், தன்னை தரக் குறைவாக விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார்.
தன்யா ராஜேந்திரனுக்கு ஆதரவாக பல பத்திரிகையாளர்கள் அவர்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர்.
இதையடுத்து தற்போது தன்னுடைய ரசிகர்கள் பெண்களை தரக் குறைவாக விமர்சிக்கக் கூடாது என விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில்,
“சமுதாயத்தில் பெண்களை அதிகம் மதிப்பவன் நான்.
யாருடைய திரைப்படத்தையும், யாரும் விமர்சிப்பதற்கு கருத்து சுதந்திரம் உண்டு.
எக்காரணம் கொண்டும், எந்த நேரத்திலும், பெண்களை இழிவாகவோ, தரக்குறைவாகவோ, விமர்சிக்கக் கூடாது என்பது எனது கருத்தாகும்.
அனைவரும் பெண்மையைப் போற்ற வேண்டும்.
யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில், சமூக இணையதளங்களில் பெண்கள் மீது தவறான கருத்துக்களை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.