‘மெர்சல்’ படம் ஒரே சமயத்தில் தமிழிலும், தெலுங்கிலும் வெளியாகும் என விளம்பரப்படுத்தப்பட்டது.
தமிழில் ‘மெர்சல்’ என்று படத்திற்கு தலைப்பு அறிவித்த அடுத்த நாளே தெலுங்கில் ‘அதிரிந்தி’ எனப் படத்தின் பெயரை அறிவித்தார்கள்.
அதற்கடுத்து இரு மொழிகளிலும் டீசரையும் வெளியிட்டார்கள்.
தமிழில் பலத்த பிரச்சனைகளுக்கு இடையே கடந்த வாரம் அக்டோபர் 18ம் தேதி ‘மெர்சல்’ வெளியானது. ஆனால், தெலுங்கு டப்பிங் ஆன ‘மெர்சல்’ படம் அன்றைய தினம் வெளியாகவில்லை.
அதன் பின் நாளை அக்டோபர் 27ம் தேதி வெளியாகும் என்றார்கள். அதில் அக்டோபர் 27ம் தேதி ரிலீஸ் என்று குறிப்பிட்டு இன்று காலை ‘அதிரிந்தி’ டிரைலரையும் வெளியிட்டார்கள்.
இதனிடையே, இன்று மாலையிலிருந்தே படம் நாளை வெளிவராது என தகவல்கள் வந்து கொண்டிருந்தன. தமிழில் உருவான ‘பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி’ சர்ச்சை ஆகிய வசனங்கள் தொடர்பாக தெலுங்கிலும் பிரச்சனை எழுந்ததாகத் திரையுலக வட்டாரங்களில் சொன்னார்கள்.
தற்போது வரை ‘அதிரிந்தி’ படத்திற்கான தணிக்கைச் சான்றிதழ் கிடைக்கப் பெறாததால் படம் நாளையும் வெளியாகாமல் மீண்டும் தள்ளிப் போகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
தெலுங்கில் பிரச்சனைக்குரிய வசனங்களை நீக்க படக்குழுவினர் சம்மதம் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. அதனால், விரைவில் சுமுகமான முடிவு எட்டப்படும் எனத் தெரிகிறது.
ஒரு நாள் தாமதமாக அக்டோபர் 28ம் தேதி படம் வெளியாக தயாரிப்பாளர்கள் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.