‘தீரன் அதிகாரம் ஒன்று’, ஒரு போலீஸ் அதிகாரியின் வாழ்க்கை – கார்த்தி

டிரிம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் ஜிப்ரான் இசையமைப்பில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடித்துள்ள ‘தீரன் அதிகாரம் ஒன்று’ வரும் 17ம் தேதி வெள்ளியன்று வெளியாக உள்ளது.

இப்படம் பற்றியும், தன்னுடைய கதாபாத்திரம் பற்றியும் நடிகர் கார்த்தி கூறியதாவது,

“நாம எல்லாரும் போலீசை சூப்பர்மேன் போன்றும், வேற்று கிரகத்தில் இருந்து இறங்கி வந்தவர்கள் போன்றும் பார்க்கிறோம். நமது வீட்டில் அண்ணனோ, தம்பியோ அல்லது நண்பர்களோ போலீசாக இருப்பார்கள். போலீஸ் அதிகாரிகள் அனைவரும் நம்மில் ஒருவர் தான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

போலீஸ் அதிகார்கள் எங்கிருந்து வருகிறார்கள். என்ன மாதிரியான குடும்ப சூழ்நிலையில் இருந்து வருகிறார்கள் என்ற விஷயம் தான் அவர்களை ஒரு வகையான போலீஸ் அதிகாரியாக மாற்றுகிறது. போலீஸ் டிரைனிங்கில் அவர்கள் போலீசாக மாற மட்டும் தான் பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்கள் எப்படிபட்ட போலீசாக இருக்கிறார்கள் என்பதை அவர்களுடைய சூழ்நிலை தான் தீர்மானிக்கிறது.

நான் ‘தீரன் அதிகாரன் ஒன்று’ படத்துக்காக சந்தித்த போலீஸ் அதிகாரி ஒருவர் முதலில் கல்லூரியில் பேராசிரியராக ஆக வேண்டும் என்று தான் முயற்சி செய்து கொண்டிருந்திருக்கிறார். ஆனால் அவர் சூழ்நிலையின் காரணமாக போலீஸ் அதிகாரியாக பணியாற்றத் துவங்கியுள்ளார்.

முதலில் குற்றத்தை கண்டால் அவருக்கு கோபம்தான் வருமாம். பதவியேற்றதும் அவர் கண் முன் நடக்கும் குற்றங்களை தட்டி கேட்கவும் முடிந்துள்ளது. இதனாலேயே போலீஸ் வேலையை அதிகமாக நேசித்து குற்றங்கள் நடப்பதை கட்டுபடுத்தியுள்ளார்.

தீரனில் முற்றிலும் உண்மையான ஒரு போலீஸ் அதிகாரியை நீங்கள் பார்க்கலாம். சாதாரணமாக போலீஸ் அதிகாரி ஒருவர் கேஸ் பைலை படிக்கும் போது எப்படி ரீயாக்ட் செய்வாரோ அதே அளவு தான் தீரனும் இந்த படத்தில் ரீயாகட் செய்வார். இதை நான் ‘சிறுத்தை’ படத்திற்காக ஒரு போலீஸ் அதிகாரியை சந்தித்த போது சாதாரணமாக எதையும் எதிர்க்கொள்ளும் அவருடைய தன்மை எனக்குப் பிடித்திருந்தது. அதைத்தான் பல காட்சிகளில் நான் கடைபிடித்துள்ளேன். இயக்குநருக்கு அது மிகவும் பிடித்திருந்தது.
இப்படத்தில் நீங்கள் வேறு ஒரு கோணத்தில் போலீஸ் அதிகாரிகளை பார்ப்பீர்கள். போலீஸ் அதிகாரிகளுக்கு தடங்கல் என்பது கிரிமினல் பக்கத்தில் இருந்து மட்டும் வராது. அதிகாரிகளிடமிருந்து, சமூகத்திடமிருந்தும் கூட வரும். இதையெல்லாம் தாண்டி தான் ஒவ்வொரு கேஸையும் அதிகாரிகள் கையாள வேண்டியுள்ளது. இதை சொல்லும் போது சாதரணமாக இருக்கும் திரையில் பார்க்கும் போது உங்களை வியக்க வைக்கும்.

இது 1995 – 2005 வரைக்கும் நடந்த உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள கதையாகும். அதை ஒரு போலீஸ் அதிகாரியின் வாழ்க்கையின் மூலம் கூறியுள்ளோம். நாம் பார்க்கும் ஒரு சில விஷயங்களை மட்டும் தான் மொத்த காவல் துறை நினைக்கிறோம், அது தவறு. நாம் அனைவரும் 8 மணி நேரம் வேலை செய்ய சம்பளம் வாங்குகிறோம். ஆனால் போலீஸ் அதிகாரிகள் ஒரு நாளைக்கு 22 மணி நேரம் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு விடுமுறை என்பதே கிடையாது.

நாம் பார்க்கும் ஒரு சில விஷயங்களை மட்டும் வைத்துக் கொண்டு மொத்த காவல்துறையும் இப்படித்தான் என்று கூறுவது தவறு. மற்ற மாநில போலீஸ் அதிகாரிகளை விட தமிழ்நாட்டு போலீஸ் அதிகாரிகள் மேல் அனைவருக்கும் பயம் உண்டு.

தீரனின் வாழ்க்கையை மாற்றிய ஒரு கேஸ் தான் இந்தப் படத்தின் கதை. நான் நடித்த கதாபத்திரங்களிலேயே எனக்கு ‘நான் மகான் அல்ல’ படத்தில் நான் செய்த கதாபாத்திரம் தான் மிகவும் பிடிக்கும். ஏனென்றால் நான் நிஜ வாழ்க்கையில் எப்படி இருப்பேனோ அப்படியே அந்த படத்தில் இருப்பேன்.

தீரன் வீட்டில் இருக்கும் போது ‘நான் மகான் அல்ல’ படத்தில் வருவது போல ஒரு பையனாக இருப்பான். போலீசாக ஸ்டேஷனில் இருக்கும் போது வேறு ஒரு விதமாக இருப்பான். மற்ற படங்களில் வருவது போல் சத்தமாக பேசுவது போன்ற விஷயங்களை தவிர்த்து நிஜமாகவே போலீஸ் அதிகாரிகள் எப்படி இருப்பார்களோ அப்படியே இந்தப் படத்தில் இருக்க நான் முயற்சி செய்துள்ளேன்.

இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக என்னை காண்பித்துக் கொள்ள பிட்னசையும் , நான் பார்த்த போலீஸ் அதிகாரிகளின் குனாதீசியங்களை , உடல்மொழியையும் பயன்படுத்தியுள்ளோம். இப்போதுள்ள இளம் போலீஸ் அதிகாரிகள் எல்லாம் மீசை இல்லாமல் தான் இருக்கிறார்கள். விட்டால் அவர்கள் எல்லாம் சினிமாவில் டூயட்டே பாடலாம். நிஜமாக இன்றைய போலீஸ் அதிகாரிகளின் தோற்றம் எப்படி இருக்குமோ அப்படித்தான் என்னுடைய தோற்றமும் இந்தப் படத்தில் இருக்கும்.

ராஜஸ்தான் மாதிரியான ஒரு flat land-ல் நாம் ஒளிந்திருந்து எதிரிகளை பிடிக்க முடியாது. மண்னுக்குள் மறைந்து தான் பிடிக்க முடியும். அதனால் தான் ட்ரைலரில் அப்படி ஒரு காட்சி இடம்பெற்றது. அது கிராபிக்ஸ் அல்ல நிஜம் தான். நம் சமூகத்தில் நடைபெறும் பிரச்சனைகளை காணும் போது எனக்கு கோபம் வரத் தான் செய்கிறது.

சமீபத்தில் கந்து வட்டி பிரச்சனையால் தீக்குளித்து குடும்பமே இறந்த அந்த சம்பவத்தைப் பார்த்த போது கோபம் வந்தது. இது போன்ற சம்பவத்தைப் பார்க்கும் போது நாம் நடவடிக்கை எடுக்க வேண்டிய அந்த இடத்தில் இருக்க வேண்டும் என்று தோணும்,” என்றார் கார்த்தி.

Read Previous

பிரபுதேவா, நிக்கி கல்ரானி நடிக்கும் ‘சார்லி சாப்ளின் 2’

Read Next

‘பொது நலன் கருதி’, எளிய மனிதர்களைப் பற்றிய கதை

Most Popular