மலையாள நடிகர் துல்கர் சல்மான் தமிழில் அடுத்து நடிக்கும் படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. இப்படத்தை புதுமுக இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கவுள்ளார். இவர் இயக்குனர் விஜய் மில்டனிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர். இப்படத்தை பிரான்சிஸ் தயாரிக்கவுள்ளார்.
‘ஓ காதல் கண்மனி, சோலோ, நடிகையர் திலகம்’ ஆகிய படங்களுக்குப் பிறகு துல்கல் சல்மான் தமிழில் நடிக்கும் படம் இது.
இப்படம் குறித்து இயக்குனர் தேசிங் பெரியசாமி பேசுகையில்,
”இது ஒரு பயணம் சார்ந்த காதல் கதை. எல்லா தரப்பட்ட எமோஷன்களும் இக்கதையில் உள்ளன. இக்கதைக்கான தலைப்பை சில காலமாகவே தேடி வந்தோம். அப்பொழுதுதான் ரஹ்மான் சாரின் பெரிய ஹிட் பாடல் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ பாடல் மனதிற்கு வந்தது.
காதலையும் ரொமான்ஸையும் ஒரே வரியில் வர்ணிக்க இந்த வரியை விட பொருத்தமானது வேறெதுவும் இல்லை. மிகப் பெரிய இளைஞர் ரசிகர் பட்டாளம், குறிப்பாக பெண் ரசிகர் பட்டாளம் உள்ள ஹீரோ துல்கர் சல்மான். இக்கதைக்கு அவரை விட பொருத்தமான ஹீரோ யாருமில்லை.
அவரது நடிப்பாலும், வசீகரத்தாலும் இப்படத்தை வேற லெவெலுக்கு கொண்டுச் செல்வார் என உறுதியாக நம்புகிறேன். அவருக்கு ஜோடியாக நடிக்க ரீத்து வர்மாவை ஒப்பந்தம் செய்துள்ளோம்.
இப்படத்திற்கு கே.எம்.பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். கலை இயக்குனர் டி. சந்தானம். படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு டெல்லியில் தொடங்கியுள்ளது,” என்றார்.