அஜித்தின் ‘மங்காத்தா’ படத்தினை மறுவெளியீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித், அர்ஜுன், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மங்காத்தா’. தயாநிதி அழகிரி தயாரிப்பில் உருவான இந்தப் படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இது அஜித் நடிப்பில் உருவான 50-வது படமாகும். இந்தப் படம் அமோக வரவேற்பினை பெற்றது.
இதனிடையே சமீபமாக பல்வேறு படங்கள் மறுவெளியீடு செய்யப்பட்டு வருகின்றன. அவை யாவும் பெரும் வரவேற்பையும் பெற்று வருகிறது. இதனால், அஜித்தின் ‘மங்காத்தா’ படத்தினை மறுவெளியீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. சிலர் மே 1-ம் தேதி வெளியீடு என்று தெரிவித்தார்கள்.
இது தொடர்பாக விசாரித்த போது, ‘மங்காத்தா’ மறுவெளியீட்டிற்கு வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. ஏனென்றால், மறுவெளியீடு செய்ய வேண்டுமென்றால் அந்தப் படத்தினை எடுத்து தற்போதுள்ள தொழில்நுட்பத்திற்கு ஏற்றவகையில் மேம்படுத்த வேண்டும். அதை செய்வதற்கு ஆளில்லை என்கிறார்கள்.
ஏனென்றால், விஜய் நடித்து வரும் ‘கோட்’ படத்தில் மும்முரமாக பணிபுரிந்து வருகிறார் வெங்கட்பிரபு. இதனால் அவரால் இதை எடுத்து செய்ய முடியவில்லை. மேலும் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். அவர் வந்து கையெழுத்திட வேண்டும் என்பதால் இதற்கு சாத்தியம் என்பதே இப்போதைக்கு இல்லை என்றே தெரிகிறது.