‘காக்கா முட்டை’ படம் மூலம் தமிழ்த் திரையுலக ரசிகர்களை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் மணிகண்டன்.
அந்தப் படத்திற்காக தேசிய விருதுகளையும் பெற்றுத் தந்து தமிழ்த் திரையுலகத்தை தலை நிமிர வைத்தார்.
அவருடைய இயக்கத்தில் அடுத்து வரும் செப்டம்பர் 2ம் தேதி ‘குற்றமே தண்டனை’ படம் வெளிவர உள்ளது.
படத்தின் தலைப்பே ஒரு கதையைச் சொல்வது போல் உள்ளது. சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சுவாதி கொலை தமிழ்நாட்டையே உலுக்கிவிட்டது.
அந்த சம்பவம் போன்றேதான் ‘குற்றமே தண்டனை’ படத்தின் கதை அமைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருந்தாலும் ‘குற்றமே தண்டனை’ படம் எப்போதோ எடுத்து முடிக்கப்பட்டுவிட்டது.
இருந்தாலும் ‘குற்றமே தண்டனை’ படத்தின் கதையும் ஒரு கொலையை அடிப்படையாக வைத்துதான் எடுக்கப்பட்டுள்ளது. ‘ஐ விட்னஸ்’ என்பது அடிப்படை விஷயமாக இருக்கும். படத்தின் நாயகன் விதார்த்துக்கு கண் பார்வையில் சின்ன பிரச்னை இருக்கும். அதை மையமாக வைத்து கதை நகர்கிறது.
நல்லது செய்பவன் கஷ்டப்படுகிறான். கெட்டது செய்பவன் சந்தோஷமாக இருக்கிறான். இதைத்தான் நமது வாழ்க்கையில் தினமும் பார்த்து வருகிறோம். இதற்கு என்ன தீர்வு? ஒருவன் செய்த குற்றங்களுக்கு என்ன தண்டனை ?, இதுதான் ‘குற்றமே தண்டனை’.
‘காக்கா முட்டை’ படம் எப்படி தமிழ் சினிமாவில் ஒரு திருப்பு முனைப் படமாக இருந்ததோ அதே போல ‘குற்றமே தண்டனை’ படமும் அமைந்து மேலும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள்.
இளையராஜா இசையைமக்க, விதார்த், பூஜா தேவரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடித்துள்ள ‘குற்றமே தண்டனை’ செப்டம்பர் 2ம் தேதி வெளியாகிறது.