ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த வருடம் வெளிவந்த படம் ‘சர்க்கார்’. அந்தப் படத்தின் கதை தன்னுடையது என வருண் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தமிழ்த் திரைப்பட எழுத்தாளர் சங்கத்திலும் அதற்கான பஞ்சாயத்து நடைபெற்றது. படத்தின் ஆரம்பத்தில் வருண் ராஜேந்திரனுக்கு கௌரவம் அளிக்கும் வகையில் ஒரு கார்டு போடப்பட்டது.
அது போன வருடம், இந்த வருடம் ‘கோமாளி’ படத்திற்காக மீண்டும் ஒரு திருட்டுக் கதை பஞ்சாயத்து வந்தது. இயக்குனர், நடிகர் பார்த்திபனின் உதவி இயக்குனரான கிருஷ்ணமூர்த்தி என்பவர் ‘கோமாளி’ படத்தின் கதை தன்னுடையது என எழுத்தாளர் சங்கத்தில் புகார் தெரிவித்திருந்தார்.
ஏற்கெனவே ரஜினிகாந்த்தை டிரைலரில் கிண்டலடித்தது ஒரு சர்ச்சையாகி அதை முடித்து வைத்தார்கள். கடந்த ஒரு வார காலமாக இந்த கதைத் திருட்டு பஞ்சாயத்து நடந்தது. கடைசியில் ‘சர்க்கார்’ பட வழியில் ‘கோமாளி’ படத்தின் கதைத் திருட்டு பஞ்சாயத்தையும் முடித்து வைத்திருக்கிறார்கள்.
‘கோமாளி’ படத்தின் ஆரம்பத்தில் கிருஷ்ணமூர்த்தியை கௌரவப்படுத்தும் விதத்தில் ஒரு கார்டு போட உள்ளார்களாம்.
திரை மறைவில் சில பல லட்சங்களை கிருஷ்ணமூர்த்திக்கு ‘கோமாளி’ தயாரிப்பாளர் தந்திருக்கலாம் என்றும் கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.