வெளியீட்டு உரிமைகள் விற்பனையின் மூலம் சாதனை படைத்துள்ளது ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம்.
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம். வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தினை தயாரித்துள்ளது. இந்தப் படத்துக்கான பிரத்யேக கார் வடிவமைக்கப்பட்டு, அதற்கு கீர்த்தி சுரேஷ் டப்பிங் கொடுத்துள்ளார்.
அனைத்து மொழிகளிலும் வெளியாகும் இந்தப் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. மேலும், பிரபாஸ் படம் என்பதால் வெளியீட்டிற்கு முன்பே பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. இதனால் படக்குழுவினர் போட்ட முதலீட்டைத் தாண்டி லாபம் எடுத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள்.
படம் வெளியீட்டுக்கு முன்பு நடைபெற்ற வியாபாரத்தினை வைத்தே சுமார் 400 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளது ‘கல்கி 2898 ஏடி’ படக்குழு. ஆந்திரா உரிமை 85 கோடி, சீடு உரிமை 27 கோடி, நிஜாம் உரிமை 70 கோடி, தமிழ்நாடு மற்றும் கேரளா உரிமை 22 கோடி, கர்நாடக உரிமை 30 கோடி, வட இந்திய உரிமை 80 கோடி, வெளிநாட்டு உரிமை 80 கோடி என சுமார் 394 கோடிக்கு உரிமைகள் விற்கப்பட்டுள்ளன.
இவை போக ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமையும் விற்கப்பட்டுள்ளது. திரையரங்க உரிமைகள் விற்கப்பட்டதன் மூலம் சுமார் 400 கோடி உரிமையைக் கைப்பற்றி சாதனை புரிந்துள்ளது ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம். அதுமட்டுமன்றி, இந்திய மொழி படங்களில் திரையரங்க உரிமைகள் மூலம் இவ்வளவு சம்பாதித்த முதல் படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
படத்தின் செலவு என்பது மிகவும் அதிகம் என்பதால், இவை போக படம் நல்லபடியாக வசூல் செய்தால் மட்டுமே போட்ட முதலீட்டை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.