சந்துரு இயக்கத்தில், ரவி பர்சூர் இசையமைப்பில், உபேந்திரா, ஸ்ரேயா மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
1970களில் நடக்கும் கதை. சுதந்திரப் போராட்ட வீரரின் மகன் உபேந்திரா. இந்திய விமானப் படையில் வேலை பார்ப்பவர். ஊருக்கு விடுமுறையில் சென்ற போது அவருடைய அண்ணன் அந்த ஊரின் ரவுடியால் கொடூரமாகக் கொல்லப்படுகிறார். அண்ணன் கொலைக்குப் பழி வாங்க, அந்த ரவுடியை பதிலுக்குக் கொடூரமாகக் கொல்கிறார் உபேந்திரா. அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக அவரே பெரிய ரவுடியாக உருவெடுக்கிறார். அவரை அழிக்க வேண்டும் என எதிரிகளும், அரசும் நினைக்கிறது. அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
கன்னடத்திலிருந்து வெளிவந்த ‘கேஜிஎப்’ படங்களின் இரண்டு பாகங்களும் பெரிய வரவேற்பைப் பெற்றது. அது போலவே படங்களை எடுக்க வேண்டும் என சில கன்னட இயக்குனர்கள் முயற்சி செய்கிறார்கள். ஆசை இருக்கலாம், அப்படியே காப்பியடிப்பது எந்த விதத்தில் நியாயம் ?.
உபேந்திராவை தமிழ் ரசிகர்கள் பலருக்கு அதிகம் தெரிந்திருக்காது. விஷால், நயன்தாரா நடித்த ‘சத்யம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கன்னடத்தில் முக்கியமான ஹீரோ. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவருடைய கன்னடப் படம் ஒன்று தமிழில் டப்பிங் ஆகி வெளிவந்துள்ளது. படம் காட்சிக்குக் காட்சி கேஜிஎப் படத்தை ஞாபகப்படுத்துவதால் அதிகம் ரசிக்க முடியவில்லை.