பிரகாஷ் இயக்கத்தில், தனுஜ் மேனன் இசையமைப்பில், விஜய் சிவன், சாந்தினி மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.
வித்தியாசமான கதை என்று சில படங்களைப் பற்றிக் குறிப்பிடுவோம். இந்தப் படம் உண்மையிலேயே வித்தியாசமான கதை கொண்ட ஒரு படம். ஏடிஎம்மில் பணத்தை நிரப்பும் ஏஜன்சியில் வேலை பார்ப்பவர் விஜய் சிவன். குடிக்காமலேயே அவருக்கு அடிக்கடி போதை வரும் ஒரு நோய் வருகிறது. அப்படி வந்த ஒரு சமயத்தில் ஏடிஎம்மில் 100 ரூபாய் நோட்டுக்களுக்குப் பதிலாக 500 ரூபாய் நோட்டுக்களை வைத்து சிக்கலில் மாட்டி, வேலையைப் பறிகொடுக்கிறார். அந்தப் பணத்தை எடுத்தவர்களை அவர் கண்டுபிடித்து மீட்கச் செல்வதுதான் மீதிக் கதை.
இப்படியெல்லாம் ஒரு நோய் வருமா என்று கேள்வி எழுந்தாலும், வித்தியாசமான அந்தக் கதாபாத்திரத்தில் அதை நம்பும்படியான நடிப்பில் வெளிப்படுத்தி இருக்கிறார் விஜய் சிவன். இடைவேளைக்குப் பின் பணத்தை எடுத்தவர்களைத் தேடி நமோ நாராயணன் உதவியுடன் அவர் செல்லும் காட்சிகள் ஒவ்வொன்றும் சிரிப்புக்கு உத்தரவாதம்.
சில படங்கள் நம்மை எதிர்பாராத விதத்தில் ரசிக்க வைக்கும். அப்படி இந்த வாரம் வெளிவந்துள்ள படங்களில் ரசிக்க வைத்துள்ள படம்தான் இது. இம்மாதிரியான படங்களை ரசிகர்கள் ஒவ்வொருக்கும் கொண்டு போய் சேர்த்தால்தான் அதற்கான சரியான வரவேற்பு கிடைக்கும்.