இந்தியாவில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக கொரானோ தொற்று காரணமாக லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரானோவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மக்கள் நலன் சார்ந்த பல்வேறு துறையினர் தங்கள் பணிகளை அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்து வருகிறார்கள்.
அப்படி பணியாற்றிய சிலர் கொரானோ தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரைப் பறி கொடுத்தும் உள்ளனர். கோடிக்கணக்கான மக்களைப் பாதுகாக்க லட்சக்கணக்கானோர் நாடு முழுவதும் தங்கள் பணிகளை திறம்பட தொடர்கிறார்கள்.
அந்த கொரானோ வீரர்களுக்காக இசையமைப்பாளர் இளையராஜா ‘பாரத பூமி’ என்ற பாடல் ஒன்றை உருவாக்கி இசை மரியாதை செய்துள்ளார்.
இளையராஜா எழுதி இசையமைத்துள்ள இந்தப் பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார்.
அமெரிக்காவில் கடந்த வருடம் நடைபெற்ற டிவி நிகழ்ச்சியில் 1 மில்லியன் டாலர் பரிசுத் தொகையை வென்ற லிடியன் நாதஸ்வரம், இந்தப் பாடலுக்காக பல்வேறு இசைக் கருவிகளை வாசித்துள்ளார். அவரது சகோதரி அமிர்தவர்ஷினியும் புல்லாங்குழல், வயலின் ஆகியவற்றையும் வாசித்துள்ளார். இவர்களின் தந்தை இசையமைப்பாளர் வர்ஷன் பாடலுக்கு மிக்சிங், மாஸ்டரிங் செய்துள்ளார்.
ஹிந்திப் பாடலை ஷாந்தனு முகர்ஜி பாடியுள்ளார்.