அர்ஜுன் நடிக்கும் புதிய படம் ‘பேரலை’

 

புதிய தயாரிப்பு நிறுவனமான இசை பிக்சர்ஸ் முதல் முறையாக பிரம்மாண்டமான பொருட்செலவில், அர்ஜுன் நடிக்கும் ‘பேரலை’ என்ற படத்தை தயாரிக்க களம் இறங்கி உள்ளது.

‘பேரலை’ படத்தை கே. எஸ் அதியமானின் இணை இயக்குனரான ஜி.கே என்ற புதியவர் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார்.

மணிரத்னத்தின் ‘கடல்’ மற்றும் வனயுத்தம் ஆகிய படங்களில் பிஸியாக இருக்கும் அர்ஜுன், ஜி.கே விடம் கதை கேட்ட மாத்திரத்திலேயே, ‘இது எனக்கான களம், நான் நடிக்கிறேன்’ எனச் சொல்லி ஒரே ஷெஷட்யூலுக்கான கால்ஷஷீட்டை அள்ளிக்கொடுத்துள்ளார்.

‘கிருஷ்ணவேனி பஞ்சாலை’ படத்தில் நடித்த  நந்தனா, இப்படத்தில் கதாநாயகியாக வெகு அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இன்னொரு நாயகனாக  ‘அன்பு’  – பாலாவும், மற்றும் பல  புதிய முகங்களும் அறிமுகமாக உள்ளனர்.

ஆனந்த், ஸ்ரீதர், ஆஷிக், ராஜ்கமல், தணிகை, அருண், ராம்குமார், பிரேம், கஜேந்திரன், அமீர், ஐஸ்வர்யா மேனன், அனு இவர்களுடன் சஞ்சனாசிங், இயக்குனர் ராஜ்கபூர் ஆகியோர் நடிக்க படம் முழுக்க முழுக்க ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ளது.

D. இமான் இசையமைக்க, ஒளிப்பதிவை ‘போர்க்களம்’ மகேந்திரன் கையாள, க. முத்துக்குமார் எடிட்டிங் செய்ய, கலை இயக்குனராக சிவா அலங்கரிக்கிறார். பாடல்கள் அனைத்தையும் யுகபாரதி எழுத உள்ளார். நடனம் அமைக்கிறார் ‘முகமூடி’ ராதிகா.

இசை பிக்சர்ஸ் சார்பில் இசை தயாரிக்கிறார். கதை, திரைக்கதை அமைத்து இயக்குகிறார் ஜி. கே. ‘போக்கிரி’ புகழ் ஏ. பிரபாகர் வசனம் எழுதுகிறார்.

இருபத்தோராம் நூற்றாண்டின் சமூகநிலையை அப்பட்டமாக சொல்ல இருக்கிறது ‘பேரலை’.  இன்றைய கணினி யுகத்தில் இளைஞர்கள் எவ்வாறு தவறான பாதையை நோக்கி இழுக்கப்படுகிறார்கள், அதனால் ஏற்படும் பின்விளைவுகள், சமூகத்தையும், சுற்றத்தையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதையும் பரபரப்பான திரைக்கதையில் சொல்லியுள்ளார்கள்.

ஒரே கதையில், மூன்று கோணங்களில் சம்பவங்கள் அலசப்படும் வித்தியாசமான பாணி  கையாளப்படுவது இதன் சிறப்பம்சம். ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுனின் ரசிகர்களுக்குமான தீனியும் நிச்சயம் படத்தில் இருக்கும் என்கிறார் இயக்குநர் ஜி.கே.

 

 

Read Previous

சாட்டை – விமர்சனம்

Read Next

ஹிந்திக்கும் ‘ரீமேக்’ செய்யும் ராஜா