தமிழ்நாட்டின் மிக முக்கிய கலாச்சார விழாவாகக் கொண்டாடப்படும் மசான கொள்ளை என்றழைக்கப்படும் மயான கொள்ளை திருவிழா இன்றும் தமிழகமெங்கும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில், கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில், ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில், ஜெயம் ரவி, த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் ‘பூலோகம்’ திரைப்படம் வட சென்னை பகுதியின் குத்துச் சண்டை கலாச்சாரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது.
இப்படத்தின் சில முக்கிய காட்சிகள் மயான கொள்ளையை முன்னிட்டு படமாக்கப்பட்டது. இந்த கலாச்சாரத்தை முழுமையாகக் காண ஜெயம் ரவி உள்ளிட்ட படக்குழுவினர், சென்னை அங்காள பரமேஸ்வரி கோவிலுக்குச் சென்றனர் .
இந்த விழாவை பார்த்த ஜெயம் ரவி, “இந்த அனுபவம் முற்றிலும் புதுமையானது. இந்த மண்ணின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் ஒரு மண்ணின் மணம் சார்ந்த படத்தில் நடிப்பது எனக்கு அளவிட முடியாத பெருமை. ‘பூலோகம்’ போன்ற மாஸ் கதையும், கதைக் களமும் என்னை மக்களிடம் மிக எளிதாக ஐக்கியமாக வைத்துவிடும் என்பதில் சந்தேகமில்லை,” என்று கூறினார்.