‘லிங்கா’ படம் இன்னும் இரண்டு நாட்களில் வெளியாக உள்ள நிலையில் ஹைதராபாத்தில் நேற்று தெலுங்கிலும் வெளியாகும் ‘லிங்கா’ தெலுங்குப் படத்தின் இசை வெளியீட்டின் வெற்றி விழா நடைபெற்றது.
இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு, கதையாசிரியர் பொன் குமரன், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா, கே. விஸ்வநாத், ஜெகபதி பாபு, தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், இயக்குனர் திரிவிக்ரம் சீனிவாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், ‘லிங்கா’ படத்தின் மூன்று ஆச்சரியங்களைப் பற்றிப் பேசினார்.
“இந்தப் படத்துல மூணு ஆச்சரியங்கள் இருக்கு. முதல் ஆச்சரியம் டெக்னீஷியன்கள். ஏ.ஆர்.ரகுமான், ரத்தினவேலு, சாபு சிரில், அனுஷ்கா, சோனாக்ஷி, அவ்வளவு பேருமே ரொம்ப பிசியனாவங்க. அது படம் பார்க்கும் போது உங்களுக்குத் தெரியும்.
இரண்டாவது ஆச்சரியம். இந்தப் படத்தோட கதை என்னோடதுன்னு சில பேர் வழக்கு போட்டிருக்காங்க. டிவிட்டர்ல ஒண்ணு படிச்சேன். ரஜினி படத்துல கதை இருக்கா, அப்படி அவரோட படத்துல கதை இருந்தால் , அதை நாலு பேரு அவங்க கதைன்னு சொன்னாங்கன்னா, நான் போய் அந்தப் படத்தை முதல்ல பார்க்கிறன்னு ஒருத்தர் எழுதியிருந்தாரு. உண்மையிலேயே இந்தப் படத்துல மிகச் சிறப்பான கதை இருக்கு. அந்த நாலு பேரோட கதை இல்லை இது, இந்தப் படத்தோட கதை பொன் குமரனுடையது. எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச கதை, இதை மாதிரி ஒரு கதையில நான் நடிச்சது எனக்குக் கிடைச்ச பாக்கியம்.
மூணாவது ஆச்சரியம் என்னன்னா…நான் இந்தப் படத்துல ரொம்பக் கஷ்டப்பட்டு நடிச்சிருக்கேன். அது வந்து சண்டைக் காட்சிகள்ல நடிச்சது கிடையாது. டிரெயின் சண்டை, கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி அதெல்லாம் கூட கிடையாது. இங்க இருக்கிறவங்களோட டூயட் பாடினதுதான் அந்தக் கஷ்டம். சத்தியமா சொல்றேன், சோனாக்ஷி கூட டூயட் பாடினதுலாம் ரொம்பக் கஷ்டம். சின்னக் குழந்தையா இருக்கும் போது சோனாக்ஷியப் பார்த்தது. என் மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா கூட வளர்ந்தவங்க. அவங்க கூட டூயட் பாடணும்னு சொன்ன உடனே எனக்கு வேர்த்துக் கொட்டிடுச்சி. என் முதல் படம் ‘அபூர்வ ராகங்கள்’ படத்துல நடிச்ச போது கூட அந்த அளவுக்கு டென்ஷன் இருந்ததில்லை. கடவுள் நடிகர்களுக்கு ஏதாவது தண்டனை கொடுக்கணும்னு நினைச்சாருன்னா, 60 வயசுல நடிகர்களுக்கு டூயட் பாடற தண்டனையைக் கொடுக்கலாம்.
கேமரா மேன் ரத்தினவேலு கூட வெளிப்படையா சொல்லியிருந்தாரு. நான் ரஜினிகாந்தை ரொம்பக் கஷ்டப்பட்டு இளமையா காட்டியிருக்கன்னு சென்னையில நடந்த இசை விழால சொன்னாரு. நான் சினிமாவுக்கு வந்து 40 வருஷம் கிட்ட ஆகிடுச்சி. ஒரு சீனியர் நடிகரா சினிமாவுக்கு என்ன தர்றீங்கன்னு கேட்டால், குறுகிய காலத்துல இந்த மாதிரி ஒரு படத்தைத் தயாரிச்சிக் கொடுத்திருக்கோம்னு சொல்வேன்,” என்றார்.
ரஜினிகாந்தின் தெலுங்குப் பேச்சை நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரும் மிகவும் ஆர்வத்துடன் கேட்டு ரசித்தனர்.
