தயாரிப்பு – ஆல் இன் பிக்சர்ஸ்
இயக்கம் – செல்வ சேகரன்
இசை – செல்வ கணேஷ்
நடிப்பு – விக்ராந்த், அர்த்தனா பினு, பசுபதி, கிஷோர், அனுபமா குமார், சூரி மற்றும் பலர்
கதை
மியூசிக்கல் கடை வைத்திருப்பவர் விக்ராந்த். அவருடைய அப்பா கபடி மீது அதிக ஆர்வம் உள்ளார். அந்த ஆர்வத்தால், அவர் பார்த்த அரசு டிரைவர் வேலையிலிருந்து சஸ்பென்ட் ஆகிறார். கபடியே பிடிக்காத விக்ராந்த் இதனால், அப்பா மீது கோபம் கொள்கிறார். ஆனால், பசுபதி யார் என்று பிளாஷ் பேக் சொல்கிறார் அம்மா அனுபமா குமார். அதன் பின் பெற்றோர்களுக்குத் தெரியாமல் அப்பாவின் சொந்த ஊருக்குச் சென்று கபடி பயிற்சி எடுக்கிறார். அப்பா மீதான பழியைப் போக்க நினைக்கிறார். அது நடந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
நடிப்பு
கிராமத்து இளைஞராக பொருத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் விக்ராந்த். அவருடைய காதலியாக அர்த்தனா பினு, பாவாடை தாவணியில் அழகாக வந்து போகிறார். விக்ராந்த் அப்பாவாக பசுபதிக்கு, கனமான கதாபாத்திரம். கண்களை நனைக்கிறார். கபடி பயிற்சியாளர் கிஷோர், கபடி ஆடும் சூரி ஆகியோரும் இயல்பாய் நடித்திருக்கிறார்கள்.
இசை, மற்றவை
செல்வகணேஷ் இசையில் பாடல்கள் பரவாயில்லை. ஒளிப்பதிவாளர் கிராமத்து அழகை அருமையாய் படமாக்கியிருக்கிறார்.
நம் மண்ணின் கதை, நம் மண்ணின் விளையாட்டு. அதற்காக முக்கியத்துவம் கொடுத்து யதார்த்தமாய் படமாக்கியிருக்கிறார் இயக்குனர். நடித்திருப்பவர்கள் அனைவருமே இயல்பாய் நடித்திருப்பது கூடுதல் பலம்.
படத்தின் திரைக்கதையில் திருப்பங்கள் அதிகமில்லை. இப்படித்தான் படம் முடியப் போகிறது என்பதை முன்னரே கணிக்க முடிகிறது.