தமிழ் சினிமாவில் விளையாட்டை மையமாக வைத்து விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில படங்களே வந்துள்ளன. ஏனோ, அந்த ஒரு ஏரியாவை மட்டும் நமது இயக்குனர்கள் அவ்வளவாக தொடுவதே இல்லை.
சில வருடங்களுக்கு முன் கிரிக்கெட்டை மையமாக வைத்து வந்த படம் கூட ஜாலியாக சொல்லப்பட்ட கதையாகவே இருந்தது. ஆனால், விளையாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாமல் சீரியசான படமாக இந்த படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் அறிவழகன்.
‘ஈரம்’ படத்தில் அமானுஷ்ய சக்தி பற்றிய படத்தை திகிலுடனும், குடும்பப் பின்னணியுடனும் கொடுத்து ரசிக்க வைத்தவர், சில வருடங்கள் இடைவெளி ஆனாலும், இந்த வல்லினத்தை வல்லமையுடனே கொடுத்திருக்கிறார்.
நட்சத்திரங்களே கிரிக்கெட்டை வருடா வருடம் சீரியசாக ஆடிக் கொண்டிருக்கும் காலத்தில் கூடைப் பந்தை (பேஸ்கட் பால்) மையமாக வைத்து கதைக் களத்தை உருவாக்கியிருப்பது பாராட்டுக்குரியது.
நகுலன், திருச்சியில் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார். கூடைப் பந்து விளையாட்டு வீரர். ஒரு முறை மேட்ச் ஆடிக் கொண்டிருக்கும் போது இவர் தூக்கிப் போடும் பந்தால் நண்பன் கிருஷ்ணா மைதானத்திலேயே மரணத்தைத் தழுவ நேரிடுகிறது. அதற்குக் காரணம் தான்தான் என்ற குற்ற உணர்ச்சியுடன் இனி பந்தையே தொடுவதில்லை என முடிவெடுக்கிறார். அதோடு, திருச்சியை விட்டு சென்னைக்கு படிக்க வருகிறார்.
புதிதாகச் சேர்ந்த கல்லூரியில் அம்ஜத், ஜெகன் என நல்ல நண்பர்கள் கிடைக்கிறார்கள். விதியின் விளையாட்டு அம்ஜத் ரூபத்தில் வருகிறது. அம்ஜத் ஒரு கூடைப் பந்து விளையாட்டு வீரர். ஒரு முறை அவருக்கும் அந்த கல்லூரி சேர்மன் மற்றும் கிரிக்கெட் டீம் கேப்டனான சித்து-க்கும் தகராறு நடக்கிறது. முடிஞ்சால் ஏதாவது மேட்ச்ல ஜெயிச்சி காட்டுங்கடான்னு சித்து சவால் விடறாரு.
இத்தனை நாளா தன்னை ஒரு சிறந்த கூடைப்பந்து விளையாட்டு வீரர்கறத மறைச்சிருந்த நகுலன் அந்த சவால்ல ஜெயிக்க களம் இறங்கறாரு. சித்து மிகப் பெரிய பிசினஸ்மேனோட மகன், இவங்க ஜெயிக்காம இருக்க எவ்வளவோ தடை செய்யறாரு. கடைசியில சவால்ல யாரு ஜெயிச்சாங்கறதுதான் படத்தோட மீதி கதை.
நகுலன், ஒரு இடைவெளிக்குப் பிறகு வந்திருக்காரு. வல்லினத்துல மெல்லினமா இளைச்சிப் போயிருக்காரு. வாங்கற காசுக்கு மேலயே அதிகமா நடிக்கிறவருன்னு நிறைய பேரு இவரை கிண்டல் பண்ணுவாங்க. ஆனால், அப்படியெல்லாம் இல்லாம இவரை அளவாக நடிக்க வச்சிருக்காரு இயக்குனர் அறிவழகன். நட்பு, காதல், கோபம், வேகம், விவேகம் எல்லாம் இருக்கிற இளமையான ஹீரோ கதாபாத்திரம், நகுலன், நன்கு நடிச்சிருக்காருன்னுதான் சொல்லணும்.
பணக்காரப் பெண்ணா இருந்தாலும் சராசரியான ஹீரோவைக் காதலிக்கிற ஹீரோயினா மிருதுளா. நகுலனை உருகி உருகி காதலிக்கிறாங்க. ஆனால், அவர் இவங்க கூந்தலைக் கூட கவனிக்காம, கூடைப்பந்தைதான் அதிகமா கவனிக்கிறாரு. சில காட்சிகள்ல முழிக்கிறாங்க, தெரிஞ்சி செய்யறாங்களா, தெரியாம செய்யறாங்களான்னுதான் தெரியலை.
நகுலன் நண்பான அம்ஜத், குணா-ங்கற கதாபாத்திரத்துல நல்ல குணச்சித்திரமான வேடம். அளவா இயல்பா ஒரு உண்மையான நண்பன் எப்படி இருக்கணுமோ அப்படியே இருக்காரு. நகைச்சுவைக்கு ஜெகன், கொஞ்சம்தான் சிரிக்க வைக்கறாரு.
காலேஜ் ‘கோச்’சா அதுல் குல்கர்னி, சினிமாத்தனமில்லாத கோச், இன்னும் கொஞ்சம் இவருக்கு காட்சிகளை சேர்த்திருக்கலாமோன்னு யோசிக்க வைக்கிற அளவுக்கு இயல்பா நடிச்சிருக்காரு. நாயகியின் பணக்கார அப்பாவா ஜெயப்பிரகாஷ், மகள் காதலை பிளாக்மெயில் செய்யும் வழக்கமான பணக்கார அப்பா.
தமன் இசையில் பாடல்கள் பெரிதாக மனதில் பதியவில்லை. இருந்தாலும் அந்த குறையை பின்னணி இசையில் சரி செய்திருக்கிறார். பாஸ்கரனின் காமிரா மைதானங்களில் புகுந்து விளையாடுகிறது.
கிரிக்கெட்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த நாட்டில் மற்ற விளையாட்டையும் திரும்பிப் பாருங்கள் என்று சொல்ல வைத்ததற்காக ‘வல்லினம்’ படத்தை வரவேற்க வேண்டும்.