நோட்டரி வழக்கறிஞராக, புகார்களை டைப் செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கும் சரவணன், நீதிமன்ற வளாகத்தில் எளிய வாழ்க்கை வாழ்பவர். அவரிடம் உதவியாளராக சேர விரும்பும் நம்ரிதாவின் முயற்சியை, “வழக்கு வாதங்களை விட நோட்டரி பணியே என் உலகம்” என்று கூறி மறுக்கிறார். ஆனால், ஒரு தந்தையின் மகளுக்கு நீதி கேட்டு நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம், சரவணனின் வாழ்க்கையை திசைமாற்றுகிறது. இந்த மரணத்திற்கு நீதி பெற வேண்டும் என்று தீர்மானிக்கும் சரவணன், பொதுநல வழக்கு தொடுத்து, காணாமல் போன அந்த பெண்ணை கண்டறிய ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்கிறார்.
நீதிமன்ற உத்தரவின்படி, காவல்துறை அந்த பெண்ணை ஆஜர்படுத்த முயல்கிறது. ஆனால், விசாரணையில், அந்த பெண் 20 ஆண்டுகளுக்கு முன்பே காணாமல் போனவர் என்பதும், தீக்குளித்த தந்தை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவருகிறது. இந்த மர்மமான தகவல்கள், “அப்படியானால் இப்போது எப்படி புகார் அளிக்கப்பட்டது?” என்ற கேள்வியை எழுப்புகின்றன. இதனைத் தொடர்ந்து, சரவணன் தானே களத்தில் இறங்கி உண்மையை கண்டறிய முயல்கிறார். ஒவ்வொரு எபிசோடிலும் எதிர்பாராத திருப்பங்கள், மர்மத்தை அவிழ்க்கும் முயற்சிகள், மற்றும் சரவணனின் விடாமுயற்சி, கதையை சுவாரஸ்யமாக முன்னெடுக்கின்றன. காணாமல் போன பெண்ணின் தலைவிதி என்ன? சரவணன் வழக்கில் வெற்றி பெற்றாரா? என்பதே மீதிக்கதை.
நடிகர் சரவணன், சுந்தரமூர்த்தி என்ற சாதாரண வழக்கறிஞராக மிக இயல்பாகவும், அளவான உணர்ச்சிகளுடனும் நடித்து பாராட்டுதல்களை அள்ளுகிறார். கருப்பு அங்கி அணிந்து நீதிமன்றத்தில் வசனங்களை பேசும்போதும், அவரது உடல் மொழியும், நடிப்பின் நேர்த்தியும் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டுகின்றன.
நம்ரிதா, சரவணனின் உதவியாளராக, தைரியமும் தீர்க்கமும் கொண்ட பெண்ணாக பளிச்சிடுகிறார். அவரது நடிப்பு, கதையின் தீவிரத்திற்கு பொருத்தமான உணர்வை சேர்க்கிறது.
அருள் டி.சங்கர், சண்முகம், திருச்செல்வம், விஜய்ஸ்ரீ, இனியா ராம் ஆகியோர் துணை வேடங்களில் தங்கள் பங்களிப்பை திறம்பட வழங்கி, கதையின் பரபரப்புக்கு உறுதுணையாக இருக்கின்றனர்.
ஒளிப்பதிவாளர் எஸ்.கோகுல்கிருஷ்ணன், நீதிமன்றம் சார்ந்த கதையை பல்வேறு கோணங்களில் காட்சிப்படுத்தி, ஒவ்வொரு காட்சியையும் புதுமையாகவும், சலிப்பில்லாமலும் வழங்கியிருக்கிறார்.
இசையமைப்பாளர் விபின் பாஸ்கர், பின்னணி இசை மற்றும் பாடல்களை கதையின் தன்மைக்கு ஏற்ப அளவாக வடிவமைத்து, சரவணனின் கதாபாத்திரத்தை மாஸாக உயர்த்தியிருக்கிறார்.
படத்தொகுப்பாளர் ராவணன், ஏழு எபிசோட்களையும் விறுவிறுப்பாக இணைத்து, பார்வையாளர்களை ஒரு நொடி கூட திசை திருப்பாமல் பயணிக்க வைத்திருக்கிறார். படத்தொகுப்பு, தொடரின் வேகத்திற்கு முதுகெலும்பாக அமைந்துள்ளது.
கதையாசிரியர் சூர்யபிரதாப்.எஸ், முன்பு வெளியான சில நீதிமன்ற கதைகளின் சாயலை உணர்த்தினாலும், தனித்துவமான திருப்பங்கள் மற்றும் திரைக்கதையால் புதிய பரிமாணத்தை வழங்கியிருக்கிறார்.
இயக்குநர் பாலாஜி செல்வராஜ், காணாமல் போன பெண்ணை மையப்படுத்தி, 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த மர்மத்தை அவிழ்க்கும் விதமாக கதையை நகர்த்தியிருக்கிறார். ஒவ்வொரு எபிசோடிலும் புதிய கேள்விகளை எழுப்பி, பார்வையாளர்களின் ஆர்வத்தை தக்கவைத்து, இறுதி வரை பரபரப்பை தக்கவைத்து தொடரை வெற்றிகரமாக இயக்கியிருக்கிறார்.
“சட்டமும் நீதியும்” தொடர், நீதிமன்ற பின்னணியில், மர்மமும், பரபரப்பும், உணர்ச்சிகரமான தருணங்களும் கொண்ட ஒரு சிறப்பான இணையத் தொடராக விளங்குகிறது. நடிப்பு, தொழில்நுட்பம், மற்றும் இயக்கத்தில் சமநிலை காத்து, பார்வையாளர்களை ஏழு எபிசோட்களையும் ஒரே மூச்சில் பார்க்க வைக்கும் இந்தத் தொடர், நிச்சயம் பாராட்டுதலுக்கு உரியது.