2016ம் ஆண்டில் ‘டிமானிடைசேஷன்’ கொண்டு வந்து நாட்டில் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து ஒரு அதிரடியைக் கொண்டு வந்தது மத்திய அரசு.
அப்போது நடப்பது போன்ற கதையாக இந்தப் படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார்கள். டிமானிடைசேஷன்தான் கதையின் முக்கியம் என்றாலும், கடைசியாக படத்தில் கருப்புப் பணத்திற்கு எதிராகவும், டிஜிட்டல் பணத்திற்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து ‘டிமானிடைசேஷன்’ஐ நியாயப்படுத்துகிறார்கள்.
ஐந்து பேர் ஒன்றாக சேர்த்து பல மோசடி வேலைகளில் ஈடுபட்டு கோடி கோடியாக பணம் சம்பாதிக்கிறார்கள். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு கெட்டப், விதவிதமான மோசடி செய்கிறார்கள். அவர்களிடம் பலர் ஏமாந்து போக, காவல் துறையினர் விசாரிக்க ஆரம்பித்து மோசடிக் கும்பலைக் கண்டுபிடித்து விடுகிறார்கள். அந்த மோசடி கும்பலின் தலைவன் விஜு ஐயப்பசாமி, தாங்கள் எதற்காக மோசடி செய்தோம் என்பது பற்றி காரணத்தைச் சொல்கிறார். அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.
படத்தில் நடித்துள்ள பலரும் புதுமுகங்கள். நாயகன் பிஜுவைத் தவிர மற்றவர்கள் காமிரா பயத்துடன் நடித்துள்ளார்கள். விதவிதமான மோசடிக் காட்சிகளைப் பார்க்கும் போது ‘சதுரங்க வேட்டை’ படத்தின் ஞாபகம் வருகிறது.
இடைவேளைக்குப் பின் மோசடி விஷயங்களிலிருந்து கருப்புப் பண விவகாரமாக கதை தடம் மாறுகிறது. ஒரு அமைச்சர் எப்படியெல்லாம் கருப்புப் பணத்தை சேர்த்து வைக்கிறார். டிமானிடைசேஷன் சமயத்தில் எப்படியெல்லாம் பணத்தை மாற்றினார்கள் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறார்கள்.
மேக்கிங்கில் இன்னும் அசத்தலாகப் பண்ணியிருந்தால் இந்தப் படம் பேசப்பட்டிருக்கும்.