விஜய் சேதுபதி, எம்ஜிஆர் மாதிரி யதார்த்தவாதி

என்எஸ்ஆர் பிலிம் பேக்டரி தயாரிப்பில், உசைன் இயக்கத்தில், ஸ்ரீகாந்த் தேவா இசையமைப்பில், அன்பு மயில்சாமி, மனிஷாஜித், சென்ட்ராயன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘அல்டி’.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் படக்குழுவினர் மற்றும் திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் ராதாரவி பேசுகையில்,

“சினிமா என்றாலே பரபரப்பாக இருப்பது ஒரு காலம் தான். அப்படி பரபரப்பாக இருக்கக்கூடிய காலத்திலும் படம் துவங்கியது முதல் இன்று வரை ஆதரவு அளித்து, இன்று நேரில் வந்து வாழ்த்தும் உயர்ந்த உள்ளம் கொண்ட விஜய்சேதுபதியை பாராட்டுகிறேன்.

சினிமா இப்போது சிரமத்தில் இருக்கிறது. பார்த்திபன் நடித்த ‘ஒத்த செருப்பு’ படத்தை திரையரங்கிற்குச் சென்று பார்த்தேன். கைபேசியில் அழைத்து வாழ்த்தினேன். திரையரங்கில் கூட்டம் வந்தாலும் மறுநாளே எடுக்கச் சொல்லிவிட்டார்கள். அதனை நினைத்து பார்த்திபன் மிகுந்த வேதனையடைந்தார். பார்க்கப் பார்க்கத்தான் மக்களுக்கு படம் பிடிக்கும். உடனே, தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்று இன்னும் நீடிக்கச் செய்ய வேண்டுமென்று கூறி வந்தேன்.

சிறு படங்கள் குறைந்தது 5 நாட்களாக திரையரங்கில் இருக்க வேண்டும். ஸ்ரீகாந்த் தேவா இசையில் ’வாஸ்கோட காமா’ பாடல் எல்லோரையும் ஆட்டம் போட வைக்கும். இயக்குநர் உசேனுக்கு எனது அடுத்த படத்தில் வாய்ப்பு கொடுப்பேன். அன்பு மயில்சாமிக்கு உங்கள் தந்தை மயில்சாமி போல் நட்பை பாதுகாத்து நல்ல பண்புகளோடு இருக்க வேண்டும்,” என்றார்.

இயக்குநர் பாக்யராஜ் பேசும்போது,

‘‘தாவணி கனவுகள்’ படத்தில் தான் மயில்சாமி அறிமுகமானார். முதல் படத்தில் 7 டேக் வாங்கித்தான் நடித்தார். அப்படிப்பட்ட மயில்சாமியா இவர் என்று இன்று வியந்து பார்க்கிறேன். அவருடைய மகன்களுக்கு ஒன்று கூற விழைகிறேன். நீங்கள் நன்றாக நடிக்கிறீர்களோ இல்லையோ ?, உங்கள் அப்பா மயில்சாமி மாதிரி நல்ல குணங்களோடு இருக்க வேண்டும்.

டிரைலர் பார்க்கும்போது புதுமுக இயக்குநர் மாதிரி தெரியவில்லை. யாரிடமும் உதவியாளராக பணியாற்றாமல் இயக்கியிருக்கிறார். ‘அல்டி’ என்றால் அல்டிமேட்டின் சுருக்கம் என்று கேட்டுத் தெரிந்துக் கொண்டேன்,” என்றார்.

நடிகர் விஜய்சேதுபதி பேசும் போது,

“மயில்சாமியின் நடிப்பும், பேச்சும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் ஒரு காட்சியில் வந்தாலும் சரி, பல காட்சிகளில் வந்தாலும் சரி அவருக்கென்று ஒரு பாணி இருக்கும். அதேபோல் பேச்சிலும், நடிப்பிலும் தேவையில்லாமல் எதையும் செய்ய மாட்டார். மிகப்பெரிய ஜாம்பாவான்களிடம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுவார்கள். மயில்சாமியிடம் பல நல்ல விஷயங்கள் இருந்தாலும், அவருடைய அப்பாவித்தனத்தை கற்றுக் கொள்ள வேண்டும். அன்பு மயில்சாமியும் அவருடைய அப்பாவிடமிருந்து கற்றுக் கொள்ள பல விஷயங்கள் இருக்கிறது. அதைக் கற்றுக் கொண்டு அன்பு மயில்சாமி வெற்றியடைய வேண்டும்,” என்றார்.

நடிகர் மயில்சாமி பேசுகையில்,

“இவ்விழாவில் கலந்து கொண்டு வாழ்த்திய அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றி. என் மகன் அழைப்பை ஏற்று நேரில் வந்து பிறந்த நாள் மற்றும் படத்தின் வெற்றிக்கு வாழ்த்துக்கள் கூறிய விஜய் சேதுபதிக்கு நன்றி. எனது இரு மகன்களும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். என் மகனின் பொறுமையை நினைத்து நான் மிகவும் பெருமையடைகிறேன். பத்து படத்தில் நடித்திருந்தாலும் இந்த படத்தில்தான் முதல் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்கிறான். விஜய் சேதுபதி எம்.ஜி.ஆர். மாதிரி யதார்த்தவாதி. பலர் கூறுவார்கள் எம்.ஜி.ஆர். இறந்துவிட்டார் என்று. ஆனால், நான் கூறுவேன் அவர் இறக்கவில்லை. யாரெல்லாம் உதவி செய்கிறார்களோ அவர்கள் எல்லோரும் எம்.ஜி.ஆர். தான்.

இயக்குநர் உசேன் பேசும்போது,

இரண்டு மாதங்களில் படம் வெளியிடுவதற்கு திட்டமிட்டிருக்கிறோம். அனைவரும் வந்து வாழ்த்தியதற்கு நன்றி என்றார்.

தயாரிப்பாளர் ரஹ்மத்துல்லா பேசும்போது,

நண்பர்கள் ஐந்து பேர் சேர்ந்து இப்படத்தைத் தயாரித்துள்ளோம். ‘அல்டி’ படம் மூலம் திரைத்துறையில் பயணிக்க வந்துள்ளோம் என்றார்.

நிகழ்ச்சியின் இறுதியாக, இசை மற்றும் டிரைலரை சிறப்பு விருந்தினர்கள் வெளியிட்டார்கள்.

Read Previous

கலைஞர் டிவி – தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்

Read Next

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘ஹீரோ’ – டீசர்

Most Popular