‘தனி ஒருவன் 2’ படப்பிடிப்பு எப்போது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயம் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘தனி ஒருவன்’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து ‘வேலைக்காரன்’ என்ற படத்தினை இயக்கினார் ஜெயம் ராஜா. அந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை.
தற்போது மீண்டும் ‘தனி ஒருவன் 2’ படத்தினை கையில் எடுத்துள்ளார். இதற்கான கதையினை முடித்து, தற்போது திரைக்கதைக்கு இறுதிவடிவம் கொடுத்து வருகிறார் ஜெயம் ராஜா. ஏஜிஎஸ் நிறுவனமே 2-ம் பாகத்தினையும் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளது.
இதனிடையே ஏஜிஎஸ் நிறுவனம் விஜய் நடித்து வரும் ‘கோட்’ படத்தினை தயாரித்து வருகிறது. இதனால் ‘தனி ஒருவன் 2’ படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ‘கோட்’ பணிகள் முடிந்தவுடன் ‘தனி ஒருவன் 2’ படத்தின் முதற்கட்டப் பணிகளைத் தொடங்கலாம் என்று ஜெயம் ராஜாவின் ஏஜிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கு கதாபாத்திரங்களுக்கான நடிகர்கள் தேர்வினை முடித்துவிடுங்கள் எனவும் தெரிவித்துள்ளது.
முதற்கட்டப் பணிகளை முடித்துவிட்டு, ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்கவேண்டும் எனவும் திட்டமிட்டு வருகிறது ஏஜிஎஸ் நிறுவனம். தற்போது ‘பிரதர்’, ‘ஜினி’, ‘காதலிக்க நேரமில்லை’, ‘தக் லைஃப்’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ஜெயம் ரவி. இந்தப் படங்களை முடித்துவிட்டு ‘தனி ஒருவன் 2’ படத்திற்கு தேதிகள் ஒதுக்கவுள்ளார்.
இந்த ஆண்டு இறுதியில் ‘தனி ஒருவன் 2’ படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது.