கொரானோ வைரஸ் காரணமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
தன்னார்வலர்கள் பலர் பல சமூக சேவைகளைச் செய்து வருகிறார்கள்.
சினிமா பிரபலங்கள் பலரும் நிதியுதவி அளித்து வருகிறார்கள். தமிழில் பெப்ஸி அமைப்பும், நடிகர் சங்கமும் உதவி வேண்டுமென கேட்டுக் கொண்டார்கள். பெப்ஸி அமைப்புக்கு நடிகர் ரஜினிகாந்த் அதிகபட்சமாக 50 லட்சம் வழங்கினார். அதையே அவரது ரசிகர்கள் பாராட்டி மகிழ்ந்தார்கள்.
ஆனால், தெலுங்குத் திரையுலகில் அதிகபட்சமாக நடிகர் பவன் கல்யாண் 2 கோடி நிதியுதவி அறிவித்துள்ளார். மத்திய அரசுக்கு 1 கோடி, ஆந்திரா, தெலங்கானா மாநில அரசுகளுக்கு தலா 50 லட்சம் என அவர் பிரித்துத் தருகிறார்.
மேலும், சிரஞ்சீவி , பிரபாஸ், மகேஷ் பாபு தலா 1 கோடியும், ராம் சரண் 70 லட்ச ரூபாய் நிதியுதவியும் அறிவித்துள்ளார்கள். அவர்களைத் தொடர்ந்து இன்னும் சில நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பு நிறுவனங்கள் அந்த மாநிலங்களில் உதவிகளை அறிவித்து வருகிறார்கள்.
ஆனால், தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களான கமல்ஹாசன், விஜய், அஜித் ஆகியோர் அவர்கள் சார்ந்து துறை தொழிலாளர்களுக்குக் கூட நிதியுதவி அறிவிக்காமல் இருப்பது திரையுலகினரிடையே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.